செய்திகள்

பதவி விலகுவதாக ஓ.பி.எஸ். நடிக்கிறார்- தினகரன் தாக்கு

Published On 2018-08-24 11:49 IST   |   Update On 2018-08-24 11:49:00 IST
அ.தி.மு.க. வெற்றிக்காக தனது துணை முதல்வர் பதவியில் இருந்தும் விலக தயார் என அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது, கபடநாடகம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #OPanneerSelvam #ADMK
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல் பொதுமக்களை சுட்டுக்கொன்ற விவகாரத்திலேயே எடப்பாடி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்த சம்பவத்தில்போய் ஆட்சியில் இருந்து எடப்பாடி விலகுவார் என்பதை எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கவழக்கில் தீர்ப்புக்கு பிறகு ஆட்சி கலைந்து எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள். ஒட்டன்சத்திரம்-தாராபுரம், அவினாசி சாலை போடும் திட்டத்தில் எடப்பாடியின் உறவினர் ராமலிங்கத்திற்கு டெண்டர் விட்டது குறித்து என்னுடைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 2 பேர் 1½ ஆண்டிற்கு முன்பே சட்டசபையில் பேசினர்.

சாலை டெண்டர் தொடர்பாக, தி.மு.க. தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இது சம்பந்தமாக வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பினாமி மற்றும் ஊழல் ஆட்சி விரைவில் அகற்றப்படும்.


அ.தி.மு.க. வெற்றிக்காக தனது துணை முதல்வர் பதவியில் இருந்தும் விலக தயார் என அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது, கபடநாடகம். அணி பிரிந்து இருந்தபோது, பிரதமர் மோடி தான் பேச்சுவார்த்தை நடத்தி அணிகளை இணைத்தார்.

குருமூர்த்தி கூறியதால் தான் பதவி ஏற்றேன் என ஓ.பன்னீர்செல்வமே கூறினார். இந்த நிலையில் அவர் பதவிக்காக நடிக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #OPanneerSelvam #ADMK
Tags:    

Similar News