செய்திகள்
கருணாநிதி நினைவிடம் - மெரினாவுக்கு பதில் வேறு இடம் ஒதுக்க தயார் என அரசு அறிவிப்பு
உடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் அடக்கம் செய்ய மெரினா கடற்கரைக்கு பதிலாக மாற்று இடம் ஏற்பாடு செய்ய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவில் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படுகிறது. நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாகவும் துரை முருகன் தெரிவித்தார்.
இந்நிலையில், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.