செய்திகள்

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-07-07 20:27 GMT   |   Update On 2018-07-07 20:27 GMT
திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்:

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதி கோபி நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் அஸ்வினி (வயது 20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தை சேர்ந்த தென்னவன் (25) என்பவரும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமாகி காதலித்து வந்தனர்.

தென்னவன், சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ந் தேதி அஸ்வினி வீட்டில் அனைவரும் கேரளாவுக்கு சென்று விட்டனர்.

அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். காதலன் தென்னவனை தன் வீட்டுக்கு அவர் வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்தார். இரவு வீடு திரும்பிய உறவினர்கள் கதவை தட்டினர்.

ஆனால் வெகுநேரமாக கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த அஸ்வினியை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
Tags:    

Similar News