செய்திகள்

கவர்னர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published On 2018-07-04 07:58 GMT   |   Update On 2018-07-04 07:58 GMT
மாநில அரசு உரிமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
சென்னை:

டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே கவர்னர் நடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள கவர்னர்களும், குறிப்பாக தமிழக கவர்னர் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DelhiPowerTussle #MKStalin
Tags:    

Similar News