செய்திகள்

வேப்பம்பட்டில் வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-06-08 06:39 GMT   |   Update On 2018-06-08 06:39 GMT
வேப்பம்பட்டில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு, டன்லப் நகரை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா.

நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி சுமித்ரா மாலையில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வர சென்றார்.

சிறிது நேரம் கழித்து சுமித்ரா திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டும் இதே வீட்டில் லேப்டாப்-ரூ. 7 ஆயிரத்தை மர்ம கும்பல் பட்டப்பகலில் சுருட்டி சென்று இருந்தனர். தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News