இந்தியா

பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமின்: இறந்த நிலையில் சமூகம் என ராகுல் காந்தி கருத்து

Published On 2025-12-24 23:31 IST   |   Update On 2025-12-24 23:31:00 IST
  • 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

புதுடெல்லி:

கடந்த 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உத்தர பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கை உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை கையாளும் முறை இதுதானா?

நீதிக்காக குரல் எழுப்பும் துணிச்சல் அவருக்கு இருப்பதுதான் அவருடைய குற்றமா?

குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வெட்கக் கேடானது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் என்ன வகையான நீதி.

நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்.

மக்களாட்சியில் குரல் எழுப்புவது உரிமை, அதை ஒடுக்குவது குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News