செய்திகள்
தமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - துப்பாக்கிச்சூடு குறித்து ஸ்டாலின் கருத்து
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுல் 9 பேரை பலியான நிலையில், இது தொடர்பாக தலைமை செயலாளரை மு.க ஸ்டாலின் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். #SterliteProtest #MKStalin
சென்னை:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார். இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மக்கள் பல நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இங்கு நடக்கும் குதிரை பேர ஆட்சி தனது ஆட்சியை தக்க வைக்க கவனம் செலுத்தி, மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.
காலை முதல் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து வரும் நிலையில், தற்போது தான் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு அனுப்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தலைமை செயலாளரிடம் முன் வைத்துள்ளேன்.
குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு நாளை செல்ல திட்டமிட்டிருந்தேன். தற்போது அதனை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.