செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இன்று சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-11-07 10:29 IST   |   Update On 2017-11-07 10:29:00 IST
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை, படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இன்று பிற்பகலில் மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் வேகமாக வந்தது.

இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பலர் அவசரம், அவசரமாக அங்கிருந்து தங்களது விசைப்படகை நகர்த்தினர். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

அதிலிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுப்பையா (வயது 35), ராஜ்குமார் (32), கஜேந்திரன் (40), சகுபர் (38) ஆகிய 4 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து அத்து மீறி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்தனர்.

மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்து கொண்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும், அவர்களின் படகுடன் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

இன்று பிற்பகலில் மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.

கடந்த 2 வாரங்களில் 3-வது முறையாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News