செய்திகள்

அறந்தாங்கி அருகே மாட்டை காப்பாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2017-11-06 15:43 IST   |   Update On 2017-11-06 15:43:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அத்தாணி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 63) விவசாயி. இவரது மனைவி சரோஜா (58). இவர்களுக்கு பழனியப்பன் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

பாலையா தனது மனைவியுடன் அத்தாணியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் பின் பக்கம் உள்ள காலி நிலத்தில் கொட்டகை அமைத்து, மாடு வளர்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் மாட்டிற்கு தேவையான இரையை போட்டுவிட்டு வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு தூங்க சென்றார்.

அதிகாலை 3 மணியளவில் மாட்டு கொட்டகைக்கு மேலே சென்ற மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் கீழே கட்டியிருந்த மாட்டின் மீது மின்சாரம் தாக்கியதால் மாடு அலறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. திடீரென மாட்டின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாலையா மாடு கட்டியிருந்த இடத்தின் அருகே சென்றுள்ளார்.

மாடு கயிற்றில் சிக்கி தான் கீழே விழுந்தது என நினைத்த பாலையா மாட்டை தூக்கிவிடுவதற்காக தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாட்டின் மீது பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் பாலையா மீதும் பாய்ந்தது. இதனால் பாலையாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



கணவர் எழுந்து சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி சரோஜா, வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது பாலையா கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கணவரை தூக்க முயன்றார். இதில் அவரது வலது கையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த சரோஜாவை அக்கம் பக்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்றனர். மின்சாரத்தை தடை செய்து பாலையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News