லைஃப்ஸ்டைல்

பதப்படுத்திய உணவு

Published On 2018-09-03 08:51 GMT   |   Update On 2018-09-03 08:51 GMT
இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.
உணவைப் பதப்படுத்துதல் நாகரிக வளர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், போர்கள் நிறைந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது. இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது. மனித பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ பதப்படுத்துதல் உதவுகிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப்பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.

அப்போது பிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு பெரும் பரிசு அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுனர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.

உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும் அவை சாப்பிடக்கூடியதாக இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.

ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு பிறகே லூயி பாஸ்சர் என்பவர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவை கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறையான வற்றல், ஊறுகாய் போன்றவை சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், சூரிய சக்தியின் மூலமே பொருட்கள் பதப்படுத்தப்பட்டன. இதுவும் ஒரு சிறந்த பதப்படுத்தும் முறை என்பதே உண்மை. 
Tags:    

Similar News