- பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
- டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல.
டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து உட்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அது ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படும். அதனை டீயுடன் சேர்த்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
பிஸ்கட்டுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் இருப்பதில்லை. பசியை கட்டுப்படுத்துவது போல் தோன்றினாலும் குறைந்த ஊட்டச்சத்துகளையே உடலுக்கு வழங்கும். டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சிலருக்கு அசிடிட்டி ஏற்படக்கூடும். இந்த பழக்கத்தை தொடர்வது உடல் பருமன், அஜீரணம் போன்ற பாதிப்புகளுக்கு வித்திடும். பிஸ்கட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து அதிகம் கொண்ட, முழுத் தானியங்கள் கலந்த பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
எண்ணெய் பலகாரம் உட்கொள்ளலாமா?
டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல. டீயில் இருக்கும் டானின், எண்ணெய்யுடன் கலந்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் டீயுடன் உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும். டீ அருந்திய பிறகு சிறிது இடைவெளி விட்டு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.