குழந்தை பராமரிப்பு

அதிகாலை-நள்ளிரவு: எந்த நேரத்தில் படிப்பது சிறந்தது?

Published On 2024-03-31 06:33 GMT   |   Update On 2024-03-31 06:33 GMT
  • அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும்.
  • இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும்.

இது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் பலரும் தூங்குவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் கண் விழித்து படிப்பார்கள். ஒரு சில மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் நள்ளிரவை தாண்டியும் படித்துவிட்டு சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வார்கள். அதிகாலையில் படிப்பது நல்லதா? நள்ளிரவை கடந்தும் படிப்பது சிறந்ததா? என்ற கேள்வி பலருக்குள் எழுவதுண்டு. எந்த நேரத்தில் படிப்பது சிறப்பானது என்பதை பார்ப்போம்.

* இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும். அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும். அந்த சமயத்தில் சிக்கலான கருத்துக்கள் மீது கவனம் செலுத்துவது எளிதான தீர்வை தரும். அதனால்தான் அதிகாலையில் படிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். மேலும் தெளிவான மன நிலையுடன் அன்றைய நாளை தொடங்குவது நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

* வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் குறுக்கீடுகள் இல்லாத சூழலை அதிகாலை உருவாக்கிக்கொடுக்கும். செல்போனை தொடாமல் அந்த அமைதியான காலத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

* மாலை நேர சூரிய ஒளியின் மறைவும், மறுநாள் காலையில் சூரிய கதிர்களின் உதயமும் தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். சூரியன் இல்லாத இரவு பொழுதில் நன்றாக தூங்கி ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் எழுவது உற்சாகமாக வைத்திருக்க உதவும். அத்துடன் காலையில் படிப்பது மனநிலையை மேம்படுத்தும். அதிகாலை பொழுதில் இயற்கை ஒளியை நுகர்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வளிக்கும்.

 * அதிகாலையில் படிப்பதன் மூலம் மாலை வேளையில் மற்ற செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கலாம். மனதை ரிலாக்ஸாக வைக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். அதன் பிறகு படிப்பை தொடர்வது எளிதாக மனதில் பதிவதற்கு வழிவகுக்கும். இரவு 10 மணிக்குள் படித்து முடித்துவிட்டு தூங்குவதும், அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.

* அதிகாலையில் சத்தமில்லாத சூழலில் படிப்பில் கவனம் செலுத்துவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இரவு நேர அமைதி சிறந்ததாக இருக்கும். இரவு பொழுதில் படிப்பது ஆழ்ந்த கவனத்தை பாடம் மீது பதிய வைக்கும். அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற அமைதியான சூழலை வழங்கும்.

* சிலருக்கு இரவு நேரத்தில்தான் சிந்தனை திறன் மேலோங்கும். மனம் தெளிவாக இருக்கும். சவாலான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மூளைக்கு வேலை கொடுப்பார்கள். புதுமையான சிந்தனை உதிப்பதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இரவு பொழுதை பயன்படுத்திக்கொள்வார்கள். அந்த சமயத்தில் படிப்பதும் சிறந்த தேர்வாக அமையும்.

 * இரவு நேரத்தில் கண் விழித்து படிப்பது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக தூங்கும் நேரம் குறைவதால் காலையில் சோர்வுக்கு வழிவகுத்துவிடும். மனதில் தகவல்களை தக்கவைத்துக்கொள்ளும் திறனையும் பலவீனப்படுத்திவிடும். அதனால் அறிவாற்றல் செயல்பாடுக்கும், போதுமான தூக்கத்திற்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். இரவு பொழுதில் கண் விழித்து படிப்பதை விட அதிகாலையில் படிப்பதே சிறந்தது.

Tags:    

Similar News