search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thinking ability"

    • அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும்.
    • இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும்.

    இது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் பலரும் தூங்குவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் கண் விழித்து படிப்பார்கள். ஒரு சில மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் நள்ளிரவை தாண்டியும் படித்துவிட்டு சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வார்கள். அதிகாலையில் படிப்பது நல்லதா? நள்ளிரவை கடந்தும் படிப்பது சிறந்ததா? என்ற கேள்வி பலருக்குள் எழுவதுண்டு. எந்த நேரத்தில் படிப்பது சிறப்பானது என்பதை பார்ப்போம்.

    * இரவில் ஆழ்ந்து தூங்கினால் மூளை நன்கு ஓய்வெடுக்கும். அதிகாலையில் எழும்போது தெளிவான மன நிலை நிலவும். அந்த சமயத்தில் சிக்கலான கருத்துக்கள் மீது கவனம் செலுத்துவது எளிதான தீர்வை தரும். அதனால்தான் அதிகாலையில் படிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். மேலும் தெளிவான மன நிலையுடன் அன்றைய நாளை தொடங்குவது நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

    * வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் குறுக்கீடுகள் இல்லாத சூழலை அதிகாலை உருவாக்கிக்கொடுக்கும். செல்போனை தொடாமல் அந்த அமைதியான காலத்தில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

    * மாலை நேர சூரிய ஒளியின் மறைவும், மறுநாள் காலையில் சூரிய கதிர்களின் உதயமும் தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். சூரியன் இல்லாத இரவு பொழுதில் நன்றாக தூங்கி ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையில் எழுவது உற்சாகமாக வைத்திருக்க உதவும். அத்துடன் காலையில் படிப்பது மனநிலையை மேம்படுத்தும். அதிகாலை பொழுதில் இயற்கை ஒளியை நுகர்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வளிக்கும்.

     * அதிகாலையில் படிப்பதன் மூலம் மாலை வேளையில் மற்ற செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கலாம். மனதை ரிலாக்ஸாக வைக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். அதன் பிறகு படிப்பை தொடர்வது எளிதாக மனதில் பதிவதற்கு வழிவகுக்கும். இரவு 10 மணிக்குள் படித்து முடித்துவிட்டு தூங்குவதும், அதிகாலையில் எழுந்து மீண்டும் படிப்பை தொடர்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.

    * அதிகாலையில் சத்தமில்லாத சூழலில் படிப்பில் கவனம் செலுத்துவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இரவு நேர அமைதி சிறந்ததாக இருக்கும். இரவு பொழுதில் படிப்பது ஆழ்ந்த கவனத்தை பாடம் மீது பதிய வைக்கும். அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற அமைதியான சூழலை வழங்கும்.

    * சிலருக்கு இரவு நேரத்தில்தான் சிந்தனை திறன் மேலோங்கும். மனம் தெளிவாக இருக்கும். சவாலான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மூளைக்கு வேலை கொடுப்பார்கள். புதுமையான சிந்தனை உதிப்பதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இரவு பொழுதை பயன்படுத்திக்கொள்வார்கள். அந்த சமயத்தில் படிப்பதும் சிறந்த தேர்வாக அமையும்.

     * இரவு நேரத்தில் கண் விழித்து படிப்பது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக தூங்கும் நேரம் குறைவதால் காலையில் சோர்வுக்கு வழிவகுத்துவிடும். மனதில் தகவல்களை தக்கவைத்துக்கொள்ளும் திறனையும் பலவீனப்படுத்திவிடும். அதனால் அறிவாற்றல் செயல்பாடுக்கும், போதுமான தூக்கத்திற்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். இரவு பொழுதில் கண் விழித்து படிப்பதை விட அதிகாலையில் படிப்பதே சிறந்தது.

    • உன்னத படைப்பாக மனிதன் திகழ்கின்றான்.
    • திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.

    இறைவன் எண்ணற்ற படைப்புகளை இந்த உலகில் படைத்துள்ளான். அவற்றில் உன்னதப் படைப்பாக மனிதன் திகழ்கின்றான். எந்தபடைப்புக்கும் கொடுக்காத ஒரு தனித்துவத்தை மனிதப் படைப்புக்கு இறைவன் கொடுத்துள்ளான். அதுவே சிந்திக்கும் திறனும், ஆற்றலும். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் மனிதன் மனம்போன போக்கில் அலைகிறான். இறை கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்கின்றான்.

    உலகத்தின் மீது கொண்டிருக்கும் மோகம் தான் சிந்தனைத் திறன் பழுதடைவதற்குக் காரணம். இதனால் மறுமையை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    அல்லாஹ் கூறுகின்றான்: ``பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த பெருங்குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது". (திருக்குர்ஆன் 3:14)

    உலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்டு அனேகமானோர் அலைந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். மறுமை எனும் புதையலை அடைந்துகொள்ள வேண்டுமெனில் இம்மை வாழ்வில் சரியான விளைச்சலை நாம் விதைக்க வேண்டும். இது கட்டாயம்.

    ஆனால் நம்முடைய தேடலும், சிந்தனையும் இம்மையை மையமாகக் கொண்டே சுழல்வதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.

    நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் கொசுவின் இறக்கை அளவுக்கு ஈடாக இருக்கும் என்றிருந்தால், அவனை நிராகரிக்கும் நிராகரிப்பாளருக்கு அவன் ஒரு மிடர் தண்ணீரைக் கூட அருந்துவதற்குக் கொடுத்திருக்க மாட்டான்". (நூல்: அஹ்மத்)

    இதன் அடிப்படையில் எது குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதை இந்த நபிமொழி அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான் மற்றொரு முறை நபி (ஸல்) கூறினார்கள்: "எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக்கொள்வான்.

    எனவே மக்களே! நீங்கள் அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்குப் பகரமாக, நிலையான வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அதாவது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக்கொள்ளுங்கள்".

    இதனையே அல்லாஹ் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: "இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு.

    அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள். அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:15)

    மனிதனின் சிந்தனைதான் செயல்வடிவமாக மாறுகிறது. அதன் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்வையும் அமைத்துக்கொள்கிறான். நன்மையான விஷயங்கள் குறித்து சிந்தித்தால் நன்மைகளைச் செய்வான். தீமைகளை சிந்தித்தால் துர்பாக்கியமே மிஞ்சும். சிந்தனையின் சிறப்பு குறித்து இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக அறிவுறுத்துகிறான்.

    "நபியே! இவர்களிடம் கூறும்: "நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன். நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித்தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்" (திருக்குர்ஆன் 34:46)

    "இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 2:219,220)

    "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)

    மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மதங்கள் சில வரையறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக அறிவுறுத்தி வழிகாட்டுகிறது, கற்றுக்கொடுக்கின்றது.

    கற்றுக்கொள்வதன் மூலமும், கற்றுக்கொடுப்பதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான். அந்த பகுத்தறிவுதான் அவனை சிந்திக்க வைக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்ல சிந்தனையும் ஒரு வணக்கமே. நல்ல சிந்தனைதான் அடிப்படையில் இருந்தே ஒரு மனிதனை மாற்றுகிறது. எனவே சிந்தித்து செயல்படுவோம்!

    ×