குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்

குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்

Published On 2022-01-12 07:14 GMT   |   Update On 2022-01-12 07:14 GMT
தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன.
வாழ்வில் பெரும் மகிழ்ச்சியையும், அழகிய நினைவுகளையும் தருவது குழந்தைப்பருவம். குறுகியதாக இருந்தாலும், அதன் நினைவுகள் பசுமையானதாக என்றும் மாறாமல் இருக்கும். அதனை இரட்டிப்பாக்கும் விதத்தில் பண்டிகை நாட்கள் அமைகின்றன. குழந்தைகள் வாழ்வில் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனால் ஏற்படும் தாக்கம் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் அறிதல்

இன்று பலர், பணியின் நிமித்தமாக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அந்த வாய்ப்பை பண்டிகைகள் பெற்றுத் தருகின்றன. பண்டிகையை கூட்டுக் குடும்பமாக கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்கின்றனர். உறவினர்களிடம் பழகும் வாய்ப்பும், பகிர்ந்துண்ணும் பழக்கமும் இதன் மூலம் ஏற்படுகிறது.

பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளுதல்

குழந்தைகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் பண்டிகைகள் மூலமாக அறிந்துகொள்கின்றனர். உதாரணமாக தைத்திருநாளில் உழவர்களின் முக்கியத்துவத்தையும், தேவையையும் அறிந்துகொள்கின்றனர். பாரம்பரிய உடைகள், விளையாட்டுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும், பலகாரங்களையும் பற்றி அறிந்து கொள்கின்றனர்.

கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்

தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது. மேலும், குழந்தைகள் தாங்கள் பெற்ற அனுபவத்தை, எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்வதால் கலாசாரமும், பண்பாடும் மறையாமல் இருக்கும்.

இனிமையான நினைவுகளை சேகரிக்கும் தருணம்

குழந்தைப்பருவ நினைவுகளை அவ்வளவு எளிதாக யாரும் மறப்பதில்லை. இப்பருவத்தில் இனிமையான நினைவுகளை மட்டுமே சேகரிப்பது அவசியம். எனவே பெற்றோர்கள் இயன்ற வரை இனிமையான நினைவுகளை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தர முயற்சி செய்ய வேண்டும். முடிந்தவரை பண்டிகை காலங்களில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பது நல்லது. மேலும் அவர்களுக்கு உறவுகளின் முக்கியத்துவத்தையும், பண்டிகைகளின் சிறப்பையும் கற்றுத்தருவது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பாடத்திற்கு, நல்ல தூண்டுகோலாக அமையும்.
Tags:    

Similar News