கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றுமா மும்பை இந்தியன்ஸ்? 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

Published On 2023-03-26 15:42 GMT   |   Update On 2023-03-26 15:42 GMT
  • 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது.
  • மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

மும்பை:

மகளிர் உலகக் கோப்பை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

கேப்டன் மெக் லேனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஷபாலி வர்மா 11 ரன், மாரிசான் கேப் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது.

ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அமலியா கெர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News