கிரிக்கெட் (Cricket)

2-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Published On 2022-09-23 21:50 IST   |   Update On 2022-09-23 21:50:00 IST
  • நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
  • 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு தற்போது டாஸ் போடப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News