கிரிக்கெட்

கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி.. 3-வது இடம் பிடித்த மும்பைக்கு ரூ.7 கோடி பரிசு அறிவிப்பு

Published On 2023-05-30 07:01 GMT   |   Update On 2023-05-30 07:01 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது.
  • 10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

அகமதாபாத்:

பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்தில் 96 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர் ), விர்த்திமான் சஹா 39 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். பதிரனா 2 விக்கெட்டும், ஜடேஜா , தீபக்சாஹர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்தார். அதோடு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

மழையால் ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரமாக இருந்தது. இதனால் போட்டியை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. 2 முறை ஆடுகளத்தை பார்வையிட்ட பிறகு போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும் என்று நடுவர்கள் 11.30 மணிக்கு அறிவித்தனர்.

நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை அணி பேட்டிங்கை தொடர்ந்தது. சி.எஸ்.கே.வுக்கு 15 ஓவர்களில் 171 ரன் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

கான்வே 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 21 பந்தில் 32 ரன்னும் (2 சிக்சர்), ரகானே 13 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அம்பதி ராயுடு 8 பந்தில் 19 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜா 6 பந்தில் 15 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மோகித்சர்மா 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் கைப்பற்றி னர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் (15-வது ஓவர்) சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட் இருந்தது.

மோகித் சர்மா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஷிவம்துபே ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் அவர் ஒரு ரன்னும் 3-வது பந்தில் ஜடேஜா 1 ரன்னும் எடுத்தனர். 4-வது பந்திலும் துபே 1 ரன்னே எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 5-வது பந்தில் ஜடேஜா 'லாங் ஆன்' திசையில் சிக்சர் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஜடேஜா கடைசி பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்து சி.எஸ்.கே. அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. இதில் 5 முறை சாம்பியன் என்பது அபாரமான ஒன்றாகும். மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது.

ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இதை வழங்கினார்கள்.

2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News