கிரிக்கெட்

கோலி, ரோகித் சர்மாவை மட்டும் இந்தியா நம்பி இருக்கவில்லை- சமிந்தா வாஸ்

Published On 2023-07-27 08:03 GMT   |   Update On 2023-07-27 08:03 GMT
  • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.
  • ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது.

புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது.

இந்தப் போட்டிகளில் இந்திய அணி நிலை குறித்து இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீரர் சமிந்தா வாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோரை மட்டும் இந்திய அணி நம்பி இருக்கவில்லை. பல இளம் வீரர்கள் அணியின் துருப்பு சீட்டுகளாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.

ஜெய்ஷ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இந்தியாவில் எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். எல்லோரும் போட்டி போடுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே விராட்கோலி, ரோகித் சர்மாவை சார்ந்து இருக்காது என்று நான் நினைக்கிறேன். மற்ற திறமையானவர்களும் இருக்கிறார்கள். கோலி, ரோகித் அபாரமாக செயல்பட்டால் பெரும்பாலும் இந்தியாவே வெற்றி பெறும்.

பும்ரா உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவரது சேவை பெற இந்திய அணி விரும்புகிறது. காயத்தில் இருந்து குணமடைந்த அவர் மீண்டும் நல்ல நிலைக்கு வருவது எளிதல்ல. பும்ரா முழு உடல்தகுதி பெற்றால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பலன் கிடைக்கும்.

ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையாக இருக்கும் அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. 50 ஓவர் போட்டிகள் அனைத்தும் 325 முதல் 350 ரன்களுக்கு செல்கிறது. எனவே எந்த அணி 320 முதல் 350 ரன்களை பெறுகிறதோ அவர்களால் வெற்றி பெற இயலும்.

இவ்வாறு சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News