கிரிக்கெட்

என்னால் தூங்க முடியவில்லை.. சிஎஸ்கேக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா வேதனை

Published On 2023-05-31 05:35 GMT   |   Update On 2023-05-31 05:35 GMT
  • நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன்.
  • வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பை வென்று சாதித்தது.

இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வரை வைரலானது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகுந்த வேதனையடைந்ததாக கூறினார்.

இது குறித்து மோகித் சர்மா கூறியதாவது:-

நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன். வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.

என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க. ஆனால் அதில் எந்த அர்த்தமுமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்.

இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags:    

Similar News