சினிமா
சென்னை அருகே டிக்கெட் எடுக்க வந்த விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் சர்கார் படத்தின் டிக்கெட் வாங்க விஜய் ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sarkar #Vijay
கூடுவாஞ்சேரி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேஷ்வரா தியேட்டர் உள்ளது.
இங்கு தீபாவளியையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.
படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நடந்தது. டிக்கெட் எடுப்பதற்காக விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு குவிந்தனர்.
இதனால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் உருவானது.
இதுபற்றி அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.
ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் டிக்கெட் எடுக்க வந்திருந்தவர்கள் அலறியடித்து சுவர் ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரின் தடியடியில் ரசிகர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடி காரணமாக தியேட்டரில் சிறிது நேரம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. #Sarkar #Vijay