சினிமா
அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது - ரகுல் ப்ரீத்சிங்
தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ரகுல் ப்ரீத்சிங், அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது என்று கூறியிருக்கிறார். #RakulPreetSingh
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஜோடி சேர்ந்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத்சிங். இப்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். வருங்கால கணவர் பற்றியும் சினிமா வாழ்க்கை பற்றியும் ரகுல் ப்ரீத்சிங் அளித்த பேட்டி வருமாறு :-
‘‘எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதை விட உயரமானவராக என்னை மணப்பவர் இருக்க வேண்டும். அவருக்கு தலைக்கனம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்க வேண்டும். நேரத்தின் மதிப்பு தெரிந்து நடக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
இப்படி நான் பேசுவதால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. இன்னும் அது பற்றி சிந்திக்கவில்லை. இப்போது எனது கவனமெல்லாம் சினிமாவில்தான். நிறைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் எடுப்பதுதான் முக்கியம். அதற்காக உழைக்கிறேன்.
சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவேன் என்று சிந்திக்கவில்லை. நான் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்ததால் சிறுவயதிலேயே உடற்பயிற்சிகளிலும் ஈடுபாடு இருந்தது. கராத்தே கற்று இருக்கிறேன். இப்போது 3 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமாவில் நடிப்பதோடு இப்படி சொந்தமாக ஒரு தொழில் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.