என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும்
    • விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை.

    மதுரையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

    "நான் இன்னும் விஜய்யையும், தவெகவையும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாடு அரசியலில் என்றும் என் பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. தவெக தொடங்கிய முதல்நாள் நான் கூறிய கருத்தையே மீண்டும் கூறுகிறேன். அரசியலுக்கு புதிய ஆட்கள் வரவேண்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். ஆனால், தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும். விஜய்யையும் நான் விமர்சிப்பேன்.

    இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்கு கட்சிகள் மாறிவந்தவர்களை வைத்துக்கொண்டு விஜய் பேசினால், அதே விஜய்க்கு அதே பாணியில் பதிலளிக்க எனக்குத் தெரியும். அரசியல் களம் நாகரீகமாக இருக்கவேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளட்டும். 

    எம்.எல்.ஏ.பழனியாண்டிமீது நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது என்று அர்த்தம். எங்கள் கூட்டணி என்ன, கூட்டணித் தலைவர் யார் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். விஜய் கைதட்டல் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்.

    விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் அவரது பேச்சை கடந்துபோய்விட வேண்டும். ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் பிரச்சனையை உருவாக்கியதே திமுகதான். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பலி ஆடாக இருக்கின்றனர்.

    தொண்டர் மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாதவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ளார். எதற்கெடுத்தாலும் டெல்லியை எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதால்தான் காங்கிரஸ் வீழ்ந்தது." என தெரிவித்தார். 

    'தாய் கிழவி' பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.

    இந்நிலையில், தாய் கிழவி படத்தின் "தாய் கிழவி வாரா.." பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
    • ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

    குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

    ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது.
    • மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.

    தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இந்த விவகாரம் மாநில அரசின் உரிமை மற்றும் ஆளுநரின் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான நீண்ட காலப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும். கடந்தாண்டு மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், (லட்சுமி நாராயணன் அமர்வு அரசின் சட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.

    தமிழ்நாடு அரசு 2022-2024 காலகட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து நீக்கப்பட்டு, மாநில அரசுக்கே வழங்கப்பட்டது.

    ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது. மாநில அரசின் கொள்கைகளுக்கு இணக்கமான மற்றும் கல்விசார் தகுதியுள்ளவர்களை நியமிக்க இந்த அதிகாரம் அவசியம் என அரசு வாதிட்டது.

    கடந்த ஆண்டு இந்த சட்டத்திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, இதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

    பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி, துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்குப் பங்கு இருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.

    உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு காரணங்களுக்காக உயர் நீதிமன்றத் தடையை நீக்கியது:

    பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவது அவசியம் எனக் கருதப்பட்டது.

    தமிழக பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் இதனால் முதல்வரே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு தடை நீங்கியது.

    • கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது.
    • திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள்

    திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா?

    கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர்  கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் ஆகியோர் மீது, ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்த வீடியோவை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

    தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறே, இன்றைய திமுக ஆட்சி இயற்கைவள சுரண்டலையும், வன்முறை அரசியலையும் ஆதரித்து வருகிறது. இன்று, செய்தியாளர்கள் வரை நேரடியாக மோசமாகத் தாக்கப்படுவது, இங்கு நடப்பது மக்களாட்சியா? அல்லது ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆட்சியா? என்றே மீண்டும் கேட்க வைக்கிறது.

    திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம். தொடர்ந்து, மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவரும் நபர்களை ஊக்குவித்து, அவர்களை அதிகாரத்தில் அமரவைக்கும் திமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிவது உறுதி.

    செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்எல்ஏ பழனியாண்டி, உடனிருந்த அவரது மகன் மற்றும் குண்டர்கள் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் சட்டத்திற்கு முன் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசு முன்வந்து பழனியாண்டியை சட்டமன்ற உறுப்பினார் பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதி பொறுப்பை மறந்து, அராஜகத்தில் ஈடுபட்ட அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பழனியாண்டி கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
    • கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது

    திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.

    கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.கஸ்டலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?

    இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.

    ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.

    • பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
    • திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?

    கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

    கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?

    ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?

    நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.

    • எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
    • பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலையின்மை இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உள்ளது.

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிவிதமான வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா அத்துமீறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்த ஆலோசனையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    125 நாட்கள் வேலை உயர்வு திட்டத்தை புதிதாக அமல்படுத்திவிட்டு அதற்காக ரூபாய் 95 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க முடியும். 125 நாட்கள் வேலை திட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது. கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றுவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

    பட்ஜெட்டில் மதுரை கோவை மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி அறிவிப்பு இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விட்ட புல்லட் ரெயில் விபத்துக்குள்ளாகி நிற்கிறது. தமிழகத்திற்கு என அறிவிக்கப்பட்ட ஒரே அறிவிப்பு என்பது புல்லட் ரெயில் திட்டம் மட்டுமே. அதை அறிவித்தபடி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ஓசூர் விமான நிலையம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்றவை ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை பழி வாங்குவது என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விரோதமான அணுகுமுறையையும், பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி மறுப்பதும் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதும்.

    தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடாது.

    இன்று இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். இந்த தொகை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பா.ஜ.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
    • டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது

    திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி,  "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

    • வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.

    ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.

    இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள்.
    • எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் "தேசப்பற்று". பலநூறு ஆண்டுகள் கல்வி, வேலைவாய்ப்பு முதல் சமூக, சமுதாய கட்டமைப்பில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சனாதான கும்பல் வர்ணாசிரமம் முதல் குல கல்வி வரை எம் அப்பாவி மக்களை உண்டு கொழுத்து கிடந்தார்கள்.

    அவர்களுக்கு சுயமரியாதை, சமூக நீதி விழிப்புணர்வு ஏற்பட்டதும் மதம் மற்றும் தேசப்பற்று என்று காரணம் காட்டி தங்கள் இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள தவிக்கிறார்கள். எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது பா.ஜ.க. செய்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×