என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
    • Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்..

    தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...

    நான் ரெடி! நீங்க ரெடியா! " என குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    விழாவில், தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல் திராவிட அரசு இயல், முறைசெய்து காப்பாற்றும் முதல்மைச்சர் நூல்கள் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு அடையாளமாக இருப்பதால் ஆதிக்கவாதிகளுக்கு திராவிட இயக்கம் எரிகிறது கசக்கிறது.

    நாம் திராவிட மாடல் என்று சொல்ல சொல்ல எரிகிறது, அவர்களுக்கு எரிய வேண்டும் என்று நாம் திரும்ப திரும்ப சொல்கிறோம்.

    திமுக நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழகத்தை வெற்றிக்கு அழைத்து செல்லும்.

    கட்டுக்கோப்பாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை தீரர்கள் கூட்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

    அரசியலில் பலரும் சொகுசான வாழ்க்கையை எதிர்பார்த்து வருகிறார்கள். அரசியலில் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து உள்ளது.

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை.திராவிட மாடல் அரசு அனைவருக்குமானது என்பதையே இந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு?
    • அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 'தமிழ்நாடு' என்ற பெயர் அழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

    "ஆரம்ப காலங்களில் 'தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம்' என்றே அரசுப்பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? வண்ணப்பூச்சு தீர்ந்துவிட்டதா? அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ணப்பூச்சு ஒப்பந்ததாரர் ஊழல் செய்துவிட்டாரா? அல்லது போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்பட்டுவிடுமா?

    இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும், திமுக அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதிகாப்பது ஏன்?. யாருடைய உத்தரவின் பேரில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்படுகிறது? தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

    தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு. இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்தார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா?

    போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் 'தமிழ்நாடு' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது தற்புகழ்ச்சிக்கானதே தவிர, தமிழ்நாடு என்ற பெயரின் மீதான பற்றுதலினால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்ற பெயரையே வைத்தோம் என பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பாரா?

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப்பேருந்துகள் அனைத்திலும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்' என்று முழுமையாக எழுத வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், 'தமிழ்நாடு' பெயர் காக்க நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது.
    • இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை மாலை நடைபெறுகிறது.

    இதுகுறித்து இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணி யின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (23-ந்தேதி செவ் வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பா ளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
    • எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 

    "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

    தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.

    விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.

    ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
    • வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் மூலம் அதிக அளவிலான பயணிகள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு முடிவு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அதிக அளவிலான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவார்கள்.

    இதன் எதிரொலியாக தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,765 நிர்ணயிக் கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையை முன்னிட்டு ரூ.9,046 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோன்று பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,573 இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.8,655 ஆகவும், ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.5,321 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.15,529 ஆகவும்,

    மும்பையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.6,119 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.13,306 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும்
    • காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1270

    தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ காணலாம். 645 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பின்பு கூடுதலாக, 625 இடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப் 2,2ஏ பதவிகளுக்கான மொத்தம் எண்ணிக்கை என்பது 1270 ஆக உயர்ந்துள்ளது.

    • குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக ரயில்வே இருக்கிறது
    • கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

    ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 

    "நடுத்தர, ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் வகையில், ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்வே, மக்கள் நலனின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, லாப நோக்கில் கட்டண உயர்வுகளுக்கான போக்குவரத்தாக மாறக் கூடாது.

    ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வரி சுமை ஆகியவற்றால் திணறும் நிலையில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்த ரயில் கட்டண உயர்வு மேலும் சுமையையே ஏற்படுத்தும். மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு–தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

    எனவே, ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இந்த மக்கள் விரோத முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
    • தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு.

    திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்த ப்படாமல் செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.

    இந்த குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகரித்துள்ளது. இது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரம் மூலம் தி.மு.க.வினர் புலி வாலை பிடித்து விட்டனர். ஏற்றுமதி நிறைந்த நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக உள்ளது. திருப்பூர் மாவ ட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பது மக்கள் மீது அவர்கள் எந்த அளவு க்கு அக்கறை வைத்திரு க்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .

    உரிய முறையில் ஆய்வு செய்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை இணைக்க தமிழக வெற்றி கழகம் முயற்சி செய்யும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் 2 கட்சிகளும் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சி னையை உருவாக்கியது இவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.
    • ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.

    குழித்துறை:

    மேல்புறம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ ஐக்கியம் அமைப்பு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு நடை பெற்றது.

    விழாவில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாரகை கத்பட், ரூபி மனோகரன் உள்பட தலைவர்களை மேளதாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, பொம்மையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மேடையில் அமரச்செய்தனர். பின்பு கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வினர் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அரசியலை பரப்ப பார்க்கிறார்கள். அதற்கு தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.

    இந்துக்களை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கிறது என்பது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு. பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தரப்பு மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறோம். அதனால்தான் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது.

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாக்களித்து இந்த வெற்றியை பெற்று விட முடியாது. இந்து சமூகத்தினரும் பெரும்பாலும் ஆதரிக்கக்கூடிய ஒரு அணியாகத்தான் எங்களுடைய கூட்டணி விளங்குகிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தவறான முழக்கம் இல்லை. யாருக்கும் எதிரான முழக்கமும் இல்லை.

    அது ஒரு ஜனநாயக முழக்கம், எல்லோருக்கும் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையிலும் தவறில்லை. அதற்கான கருத்தை சாமிதோப்பு அடிகளார் இந்த மேடையில் பதிவு செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
    • இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் , "வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். த.வெ.க. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்" என்று தெரிவித்தார்.

    இதனுடைய, தவெக கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி, "தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    தவெக பிரச்சார கூட்டங்களில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை (23-ந் தேதி)யுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5-ந்தேதி திறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது.

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வெளியூர் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்கள். விடுமுறை நாட்களை கணக்கிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து உள்ள தால் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரெயில்கள், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 325 பஸ்களும் 24-ந் தேதி 525 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23, 24-ந் தேதியில் மொத்தம் 91 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2025 பஸ்களுடன் கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    அரசு பஸ்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×