என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு காவல்துறையே காரணம்' - திருமாவளவன்
- போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் குறிவைக்கப்பட்டதற்கு அடிப்படை பின்னணி
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசிலவையே மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை.
அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். மூச்சுத்திணறல் மரணத்திற்கு காரணம் என காவல்துறை கூற, ஆகாஷின் வாக்குமூலங்களும், பிரேத பரிசோதனை அறிக்கையும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையையும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மரணத்திற்கு காரணம் காவல்துறையே என தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் மரணத்துக்கு காவல் துறையின் மூர்க்கத்தனமும், மருத்துவத் துறையின் அலட்சியமுமே காரணம். சம்பந்தப்பட்ட காவலர்களை உடனே கைது செய்ய விசிக வலியுறுத்துகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் குறிவைக்கப்பட்டதற்கு அடிப்படை பின்னணி. ஆகாஷ் மரண விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






