search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாடிமிர் ஜெலன்ஸ்கி"

    • போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • முதல் பயணமாக உக்ரைன் செல்ல விரும்பினேன் என்றார் கேமரூன்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    இரு தரப்பிலும் உயிரிழப்புகளும், கட்டிட சேதங்களும் அதிகமாக இருந்தாலும், போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றார். ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் முதல்முறையாக அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார், கேமரூன். அங்கு சென்ற அவர், அந்நாட்டு தலைநகர் கீவ் (Kyiv) நகரில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    "எனது முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன்தான் செல்ல விரும்பினேன். இந்த வருடம், அடுத்த வருடம் என்று அல்ல, போர் எத்தனை வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் ஆதரவு தார்மீக ரீதியாக தொடரும். அரசியல் மற்றும் ராணுவ உதவிகளும் தடையில்லாமல் வழங்கப்படும். கடந்த 3 மாதங்களில் கருங்கடல் (Black Sea) பகுதியில் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கும் உலக உணவு போக்குவரத்திற்கும் மீண்டும் உக்ரைன் வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது" என டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் டேவிட் கேமரூனுக்கு வாழ்த்தும், உக்ரைனை ஆதரிப்பதற்கு இங்கிலாந்திற்கு உக்ரைன் மக்களின் நன்றியையும் தெரிவித்தார்.

    • ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது.
    • இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    கீவ் :

    ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

    ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷியாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களால் இன்னும் தாக்குதலை தொடங்க முடியவில்லை. பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது" என கூறினார்.

    மேலும் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற காத்திருப்பதாகவும், நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைமை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது.
    • உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீவ் :

    ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் ரஷியாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது.

    புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷிய துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்" என்றார்.

    • உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம்.
    • எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

    அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

    வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார். ஜெலன்ஸ்கிக்கு ஜோ பைடன் 2 கட்டளை நாணயங்களை வழங்கினார்.

    இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், "இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது" என புகழாரம் சூட்டினார். உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு தான் நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ஜெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தையொட்டி, உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரத்து 306 கோடி) பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்கு அமெரிக்க தேசியக்கொடியை வழங்கினார்.

    இந்த கூட்டுக்கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசும்போது கூறியதாவது:-

    எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன்.

    உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம். நாங்கள் கண்ணியத்துடன், வெற்றிகரமாக சுதந்திரத்தை அடைவோம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். எங்கள் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், எங்களில் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தீபத்தை அணைத்து விட முடியாது.

    ரஷியா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களைக் காக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். அவர்கள் எங்களை ஈரான் டிரோன்களால் தாக்கினால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் மக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடத்துக்கு செல்வார்கள்.

    எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    இந்த போர், என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும்.

    உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது. ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின.
    • சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் விடுவித்துள்ளது என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது.

    முதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷியா பின்னர் மருத்துவமனைகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியது.

    உக்ரைன் படை வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் தலைநகர் கீவை கைப்பற்ற வேண்டும் என்ற ரஷிய கனவு, உக்ரைனின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாமல் போனது.

    இதற்கிடையே, ரஷியாவின் பார்வை கிழக்கு உக்ரைன் மீது படிந்தது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்தது. அந்தப் பகுதியின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பல நகரங்கள் ரஷியாவின் வசமாகின. அந்த நகரங்களை மீட்டெடுக்க ரஷியாவுடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

    உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷியா வசம் போன முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், இந்த மாத தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிலடியை ஆரம்பித்ததில் இருந்து ரஷியாவிடம் இருந்து 3 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை உக்ரைன் மீட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் நீக்கம்.
    • தூதர்கள் நீக்கம் தொடர்பான காரணங்களை உக்ரைன் அதிபர் தெரிவிக்கவில்லை.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் உக்ரைன் அதிபர் மாளிகை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில் அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×