search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பலகைகள்"

    • 15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும்.
    • உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் சென்னை ஐகோர்டின் உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 203 விளம்பர பலகைகள் மற்றும் கடைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 44 விளம்பர பலகைகள் என மொத்தம் 247 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

    15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே விளம்பர பலகை வைக்க அனுமதிக்க வேண்டும். உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி பெறாத விளம்பர பலகைகளை கட்டிடத்தின் உரிமையாளர்களே தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அகற்றிட அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
    • அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மற்றும் கோவையில் பேனர்கள் விழுந்து 4 பேர் பலியானார்கள். இதை தடுப்பதற்காக பேனர்கள் வைக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் அபராதம் முதல் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    மேலும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வைத்தாலும் கட்டிட உரிமையாளரே பொறுப்பு என்பது விதி.

    கடுமையான சட்டங்கள் வந்தும் கூட பேனர் வைக்கும் கலாச்சாரம் கட்டுப்படவில்லை. தலைநகர் சென்னையிலேயே பிரதான சாலைகளில் ஏராளமான பேனர்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டுள்ளன.

    அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னல் பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்களின் மீது ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் மிக முக்கிய சாலையாக, அண்ணா சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த சாலையை பல லட்சம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலையில் தற்போது திடீரென விளம்பர பலகைகள், 'பேனர்'கள் வைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை ஏராளமான விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதில், பெரும்பாலான விளம்பர பலகைகள், பல மாதங்களாக உள்ளன. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்ணா மேம்பாலம் அருகில் பல விளம்பர பலகைகள், மாதக்கணக்கில் வைக்கப்பட்டு உள்ளன.

    முக்கிய சாலை பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டு உள்ளதா? அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டு உள்ளதா என சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள இந்த விளம்பர பலகைகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன. விளம்பர பலகைகள், பேனர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகிக்கொண்டு செல்கிறது. சென்னை மாநகரின் முக்கிய பகுதியான அண்ணா சாலையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பலத்த காற்றில் திடீரென விளம்பர பலகைகள் சரிந்து விழுந்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலித்து, அனுமதி பெறாத விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது.
    • உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன்படி திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.

    அதேபோல், உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பாதகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-P-ன்படி அகற்றப்பட வேண்டும்.

    மேற்படி பிரிவுகள் 117-O, 117-P ஆகியவற்றின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றி விடும். பின்பு, அதற்கான செலவினம் பிரிவுகள் 117-O, 117-P மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

    மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    விதிகள் 322, 341-ல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும் உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
    • மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாலையில் வைக்கப்படும் பேனர்களை உடனுக்குடன் அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பேனர்களை அகற்றுவது, தூய்மை பணிகளை செய்வது மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    மண்டல அதிகாரிகள், செயற்பொறியாளர்கள், வருவாய் உதவி அதிகாரிகள், தூய்மை இந்தியா திட்டப்பணியின் செயலாக்க குழு, சுகாதார கல்வி அதிகாரி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பேனர்களை தாங்கி நிற்கும் இரும்பு, மரப்பலகைகளையும் அகற்ற வேண்டும்.

    சாலையோரம் குவிக்கப்படும் பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாத்து வைத்து ஏலத்தில் விட வேண்டும். சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றி வன்ண ஓவியம் வரைந்து அழகாக்க வேண்டும். 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகள் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    ×