search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைசென்ஸ் ரத்து"

    • வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
    • பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிவேக பைக்குகளில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதும், இதனை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டு பெருமைபட்டு கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த வீடியோக்களுக்கு அதிகளவு லைக்குகளும், கமாண்டுகளும் வருவதால் இளைஞர்கள் இவ்வாறு வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். போலீசார் எத்தனை முறை அறிவுரைகள் கூறினாலும், இளைஞர்கள் செவிசாய்க்க மறுக்கின்றனர்.

    இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரல் ஆகியது.

    முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், திருச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சியில் பட்டாசுகளை வைத்து வீலிங் செய்யும் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து கோட்டை போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட சாலையில் வீலிங்கில் ஈடுபட்ட சிந்தாமணி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா(வயது 24), காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பால்பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள சாலையில் வீலிங் செய்த தாரநல்லூர் ராஜேஷ்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதே போல புறநகர் பகுதியில் ஜீயபுரம், லால்குடி, சமயபுரம், கானகிளியநல்லூர் ஆகிய 4 காவல் நிலையங்களில் வாக்கு பதியப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி(24 ), அஜித் (22) சக்திவேல், விஜய், வசந்தகுமார், அருள் முருகன், பெருமாள், கிரீஷ்குமார், அஜீத்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடித்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் சாலை விதிகளை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றிச்செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, கடந்த மாதம் மட்டும் சேலம், தர்மபுரியில் சாலை விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 36 டிரைவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்கு வரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை வாகன விபத்துக்களால் உயிரிழப்பை ஏற்படுத்திய 376 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் மட்டும் சேலம், தருமபுரியில் 36 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடித்து வாகனத்தை ஓட்ட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

    • புகார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சில ஆட்டோக்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயங்குவதாகவும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறுகையில்,பு கார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது இதையடுத்து ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை உரிய ஆவணங்களுடன் இயக்கவேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளுடன் ஆட்டோவை இயக்குதல், உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இனி அடிக்கடி ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×