விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் - அதிகாரி எச்சரிக்கை

புகார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள். 
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள். 
Published on

பல்லடம் :

பல்லடம் பகுதியில் உள்ள சில ஆட்டோக்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயங்குவதாகவும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறுகையில்,பு கார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது இதையடுத்து ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை உரிய ஆவணங்களுடன் இயக்கவேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளுடன் ஆட்டோவை இயக்குதல், உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இனி அடிக்கடி ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com