search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மந்திரி"

    பத்திரிகையாளர் பிரியா ரமணி அளித்த பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பரிடம் டெல்லி நீதிமன்றம் இன்றும் குறுக்கு விசாரணை நடத்தியது.
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் கடந்த ஆண்டு டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.



    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    இவ்வழக்கில் நேற்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் எம்.ஜே.அக்பர் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பிரியா ரமணியின் வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் அக்பரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    அவர் கேட்ட பல கேள்விகளுக்கு நினைவில்லை. நீங்கள் சொல்வது சரியல்ல என்று அக்பர் பதிலளித்தார். பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு  மாஜிஸ்திரேட் சமர் விஷால் ஒத்திவைத்தார்.
     
    இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரி கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். #GonenSegev
    ஜெருசலேம்:

    இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.  #GonenSegev

    நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #JanardhanaReddy #BriberyCase
    பெங்களூரு:

    பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.

    அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 
    கேரளாவுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு தடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மந்திரி பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்து உள்ளது. இதனால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு, மின்சார தடை, குடிநீர் தட்டுப்பாடு என்று பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்துள்ளனர்.

    கேரள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. பினராயி விஜயனும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்த நிதியை பெறுவதில் சட்ட சிக்கல் இருப்பதால் ஐக்கிய அரசு அமீரகத்தின் ரூ.700 கோடி தங்களுக்கு வேண்டாம் என்று மத்திய அரசு அறவித்தது.

    இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரக தூதர் கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்குவதாக அந்த நாடு கூறவில்லை என்று தெரிவித்ததால் இந்த நிதிஉதவி விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. கேரளாவுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி தருவதாக கூறியது உண்மை தான் என்று மீண்டும் வலியுறுத்தினார்.


    இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜப்பான் உள்பட பல வெளிநாடுகள் அளிக்க முன்வந்துள்ள நிதிஉதவியை சட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தடுப்பதாகவும் அந்த நிதிஉதவிகள் கேரளாவுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கேரள முன்னாள் மந்திரி பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    அந்த மனுவில் நாட்டில் பேரிடர் ஏற்படும் போது வெளிநாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் பெறுவதற்கு நிவாரண சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் மத்திய அரசு பல காரணங்களை கூறி கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதிஉதவிகளை தடுக்க முயல்கிறது. அந்த நிதிஉதவிகள் கேரள மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பெரு மழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு சிறிது, சிறிதாக திரும்பிக் கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods
    ×