search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கொள்கை ஊழல்"

    • இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.
    • காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாக வாதம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மணீஷ் சிசோடியாவிடம் இன்னும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், எனவே இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.

    'அமலாக்கத்துறை இதுவரை என்ன செய்தது? 7 மாதங்களாக வழக்கை விசாரித்து, மேலும் கஸ்டடி கேட்டால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் காட்ட வேண்டும். சிபிஐ நடத்த வேண்டிய விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நான் எதிர்க்கிறேன். அமலாக்கத்துறையானது குற்றச்செயல்கள் தொடர்பான வருமானத்தை மட்டுமே விசாரிக்க முடியும், குற்றத்தை அல்ல' என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

    அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குனரகம், 'சிபிஐ விசாரித்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிசோடியா புகார் அளித்தார். எனவே, அவரிடம் அதிக நேரம் விசாரிக்கவில்லை' என்று தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிசோடியாவின் கஸ்டடியை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிசோடியா தனது வீட்டு செலவினங்களுக்காக காசோலையில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    • மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

    மணீஷ் சிசோடியா  விசாரணைக் காவலுக்கு அனுப்பப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

    • ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
    • மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் காட்டம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பணமும் சிக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. விசாரணை முடிந்து மணீஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். இந்நிலையில் இன்று அமலாக்கத்தறை அவரை கைது செய்தது. ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளை உருவாக்குவதன் மூலம் மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மதுபான கொள்கையை திரும்பப் பெற்றிருக்காது என்று பாஜக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×