search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னுசாமி"

    • தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்கள் எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள்.
    • 9 வயதில் பொன்னுசாமி தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இசை உலகிற்கு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. நாதஸ்வரத்தை ரசிக்காதவர்கள் கூட இந்த படத்தின் காட்சிகளை பார்த்து அந்த இசையை தனக்குள் ஈர்த்து மெய்மறக்கும் அளவுக்கு சென்றனர்.

    இந்த திரைப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள். கழுத்து நரம்புகள் புடைக்க நாதஸ்வரத்தை இசைப்பது போன்று நடிகர் சிவாஜிகணேசன் நடித்தபோதிலும், அதன் பின்னணியில் இருந்தது இந்த இசை சகோதாரர்கள் என்பதை மறுக்கமுடியாது.


    9 வயதில் பொன்னுசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவரது அண்ணன் சேதுராமன் தம்பியின் இசை ஆர்வத்தை உணர்ந்து தனது 11-வது வயதில் அவருடன் கைகோர்த்தார்.

    1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருது, கர்நாடக மாநில அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த இந்த இசை சகோதரர்களின் பயணம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலம் கடந்தும், நாடுகளை கடந்தும் ஒலிக்க தொடங்கியது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இவர்களது நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை பல முறை பறைசாற்றி உள்ளனர்.


    இதில் பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆனால் நாதஸ்வரத்தை மறக்கவில்லை. தினமும் ஒருமுறையாவது அந்த நாதஸ்வரத்தை தொட்டு வணங்கி தனது நாடிக்கமலத்தில் இருந்து வரும் காற்றுக்கு இசை உருவம் கொடுத்த ஒப்பற்ற கலைஞராக அனைவராலும் போற்றப்பட்டு வந்தார். இசை நுணுக்கங்களை தெளிவாக கற்று அதனை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப் படத்திற்கு பிறகு கோவில் புறா என்ற படத்திலும் இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதன்பிறகு திரைக்கு வரவில்லை.

    சமீப காலம் முதல் குறைந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பொன்னுசாமி உரிய சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் தனது 91-வது வயதில் மதுரை விளாங்குடி விசாலாட்சி மின் காலனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தில்லானா மோகனாம்பாள் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாதஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளனர்.


    பொன்னுசாமி

    இவரது இழப்பு இசை உலகிற்கு பேரிழப்பு என்று கூறி பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த பொன்னுசாமிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். மகள் மதுரையில் உள்ள அரசு இசைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ×