search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் தரிசனம்"

    சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்து கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். #Sabarimalatemple #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

    மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.

    அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.

    இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.

    இதுபோல சென்னையைச் சேர்ந்த பரஞ்ஜோதி என்ற 47 வயது பெண்ணும் சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற பரஞ்ஜோதியின் பெயர் ஆண் என்றும், பெண் என்றும் டிக்கெட்டில் பதிவாகி இருப்பதை காணலாம்.


    ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.

    கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார்.  #Sabarimalatemple #SC
    சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

    இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை ரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.



    பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை தரிசித்ததாக தகவல் வெளியானது. இவர், 18-ம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது.

    இது உண்மைதான் என்று போலீசார் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தந்திரிகள் தெரிவித்தனர். இந்த குழப்பத்தை போக்க சன்னிதானத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் சசிகலாதானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

    இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் போலீசார் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

    சசிகலா, சாமி தரிசனம் செய்ததை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

    கேரள போலீசார் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாகவும் கூறினர்.

    இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராக இருக்கும் தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    அந்த அறிக்கையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை தரிசித்துள்ளனர் மற்றும் அவர்கள் யார்? யார்? என்ற விவரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது. #SabarimalaTemple

    ×