search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளி"

    • சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால்  விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை ஓரிரு நாட்கள் குறைந்திருந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன்பின்னர் தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று முதல் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100-க்கும் விற்கப்பட்டது. இன்று அதைவிட உயர்ந்து உச்சத்தை தொட்டது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.

    சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிட குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

    தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர். தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அதேசமயம், தக்காளிக்கு மாற்றாக புளி மற்றும் எலுமிச்சையை சமையலில் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளனர். குறிப்பாக சாம்பாரில் தக்காளிக்குப் பதில், புளிப்பு சுவைக்காக புளி அல்லது மாங்காய் சேர்க்கின்றனர். மாங்காய் சேர்ப்பதால் சுவை தனித்துவமாக இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர்.

    • தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
    • புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.

    இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.

    இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.

    • ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • 1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை கிராமங்கள் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் சித்தேரி மலை, தீர்த்தமலை பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சரிவான நிலப்பகுதிகள், தரிசு நிலங்களில், பாரம்பரிய முறையில் நீண்டகால பலன் தரும் புளியமரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் புளிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இதுமட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் பகுதி கிராமங்களிலும், தரிசு நிலங்களிலும், பாரம்பரிய முறையிலும், குறைந்த நாட்களில் கூடுதல் மகசூல் கொடுக்கும், சதைப்பற்று மிகுந்த ஒட்டுரக புளி மரங்களையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    மலை கிராமங்களுக்கு செல்லும் வாழப்பாடி பகுதி வியாபாரிகள், விவசாயிகளிடம் புளியம் பழத்தை மேலோடுகளுடன் கொள்முதல் செய்து கொண்டு வந்து, கூலித்தொழிலாளர்களை கொண்டு ஓடு மற்றும் விதையை நீக்கி பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். விவசாயிகளே நேரடியாகவும் விற்பனை செய்கின்றனர்.

    சேலம் மாவட்ட எல்லையிலுள்ள மலை கிராமங்களில் விளையும் புளி சமையலுக்கு ஏற்ப இனிப்பு கலந்த புளிப்புச்சுவையுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் விரும்பி வாங்கி, அன்றாடம் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு புளி அறுவடை தொடங்கியுள்ளது. மரத்தில் இருந்து புளியம் பழங்களை உதிர்த்து அறுவடை செய்து, மேலோடு மற்றும் விதையை நீக்கி விற்பனை செய்வதில் விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விற்பனைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    1கிலோ முதல் தர புளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கு சமையலுக்கு தேவையான அளவிற்கு புளியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில் பொதுமக்கள் மட்டுமின்றி உணவகம், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் மளிகை வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாத இறுதியில் அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தொடர்ந்து இரு மாதங்களுக்கு புளி விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×