search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்க்கடன் தள்ளுபடி"

    விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
    புதுடெல்லி:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவில், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் ஏற்கனவே ரூ.5 ஆயிரத்து 780 கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பெரும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.1,980 கோடி செலவாகும். மேலும் அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று பல தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்டு உள்ளது. எனவே, மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    தமிழக அரசின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
    ×