search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலைகள்"

    பட்டாசு ஆலைகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    சிவகாசி:

    சிவகாசியில் சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25-ம் ஆண்டு விழா பள்ளியின் தளாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சமூக அக்கறையோடு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டாசு ஆலைகளில் தற்போது வேலையின்றி உள்ளதால் கல்வி கட்டணத்தில் இந்த பள்ளி சிறப்பு சலுகை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

    பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வி செல்வம்தான் அழியா செல்வம். கல்வியில் சிறந்த நாட்டில் பொருளாதாரம் உயரும்.

    விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வில் 17 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் அழகேஸ்வரிஞானசேகரன், ஏர்போர்ட் அத்தார்டி உறுப்பினர் கதிரவன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, கவிஞர் காளியப்பன், பள்ளி முதல்வர் பிரபு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, எதிர்கோட்டை மணி கண்டன், ராமராஜ், திருத் தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டு றவு சங்க தலைவர் ஆரோக் கியம், விஸ்வநத்தம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர்:

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசுகளை தான் தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

    இந்த உத்தரவுப்படி பட்டாசுகள் தயாரிக்க முடியாது, நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டாசு ஆலைகள் கடந்த நவம்பர் மாதம் 13-ந் தேதி மூடப்பட்டன.

    ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்பட்டு வந்த 1070 பட்டாசு ஆலைகளும் அடைக்கப்பட்டன. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்ட 4 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக ஈடுபட்ட 5 லட்சம் தொழிலாளர்கள் என 9 லட்சம் பேர் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தவிப்புக்குள்ளான தொழிலாளர்கள், பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை, கஞ்சி தொட்டி திறப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் வினியோகஸ்தர்கள் மற்றும் பட்டாசு சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பட்டாசு தொழிலுக்கான பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண, தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள சோனி மைதானத்தில் பட்டாசு தொழிலாளர்கள் திரண்டனர். முதல் நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

    காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடக்கிறது. இதில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள போராட்டம் குறித்து இன்றைய போராட்டத்தின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

    பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.

    ஒலி அளவு வரையறைக்கு உட்பட்டுதான் சரவெடிகளை தயாரித்து வந்தோம். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு சரவெடிக்கு தடை விதித்துள்ளது.

    பசுமை பட்டாசு என்ன? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தான் எங்களுக்கு கிடைக்கும்.

    அதன்பின்னர் தான் பசுமை பட்டாசு குறித்து முடிவு செய்யப்படும். 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.



    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை நாங்களே முன்வந்து மூட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளோம்.

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த தொழில் காப்பாற்றப்படும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த தீபாவளி தினத்தன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2,000-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். நேரக்கட்டுப்பாடு காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்த நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 3 வருடங்களில் பட்டாசு தொடர்பான வழக்குக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

    மத்திய அரசு இந்த தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முடிவை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த முடிவால் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். #SC #SivakasiFireworks
    ×