search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர்:

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசுகளை தான் தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

    இந்த உத்தரவுப்படி பட்டாசுகள் தயாரிக்க முடியாது, நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டாசு ஆலைகள் கடந்த நவம்பர் மாதம் 13-ந் தேதி மூடப்பட்டன.

    ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்பட்டு வந்த 1070 பட்டாசு ஆலைகளும் அடைக்கப்பட்டன. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்ட 4 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக ஈடுபட்ட 5 லட்சம் தொழிலாளர்கள் என 9 லட்சம் பேர் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தவிப்புக்குள்ளான தொழிலாளர்கள், பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை, கஞ்சி தொட்டி திறப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் வினியோகஸ்தர்கள் மற்றும் பட்டாசு சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பட்டாசு தொழிலுக்கான பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண, தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள சோனி மைதானத்தில் பட்டாசு தொழிலாளர்கள் திரண்டனர். முதல் நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

    காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடக்கிறது. இதில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள போராட்டம் குறித்து இன்றைய போராட்டத்தின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×