search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமன எம்எல்ஏக்கள்"

    புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுடெல்லி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.



    இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    அதன்பின்னர் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என அறிவித்தனர். மேலும்  எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தினர். #PuducherryAssembly #NominatedMLAs
    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் மறுவிசாரணைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் கேள்விக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்தார். #PuducherryAssembly #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்க மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒரு உரிமை பிரச்சினையை எழுப்பி பேசினார்.

    அவர் பேசும்போது, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்துள்ளது. இவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கக்கூடாது என நான் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கிறீர்கள்? என்று கேட்டார்.

    இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்து பேசியதாவது, சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்பிற்கு இணங்க 3 பேரும் இந்த சட்டமன்ற கூட்ட நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தில் 11.9.2018-ல் மறுவிசாரணை வரும் வரை பொருந்தும். அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். #PuducherryAssembly #Speaker #Vaithilingam
    புதுவை சட்டசபைக்குள் 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க. 2, சுயேச்சை 1 என மொத்தம் ஆளும் கட்சியின் பலம் 18 ஆக உள்ளது.

    சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 8, அ.தி.மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் பலம் 12 ஆக இருந்தது.

    தற்போது 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சபையை ஒரு வாரம் முன்னதாக 19-ந்தேதியே முடித்தனர்.

    அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு தடையில்லை என்பதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

    இதற்கிடையே யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட்டிற்கு கவர்னரின் ஒப்புதல் பெற்று சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கவர்னர் பட்ஜெட் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாமலேயே சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அரசே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    இன்று மின்துறை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் செயல்படவும் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன்.

    இதற்கான கோப்பு கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. 26-ந்தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryAssembly #Kiranbedi
    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தால் புதுவை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாகவே முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்து உள்ளது.

    பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து வருகிறார். இதனிடையே சென்னை ஐகோர்ட்டு எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் வருகிற 19-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதனால் புதுவை சட்டசபையின் பட்ஜெட் தொடரில் பங்கேற்போம் என நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இதற்காக நேற்றைய தினம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் புதுவை சட்டசபைக்கு வந்தனர்.

    ஆனால், அவர்களை சபை காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சபை காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் நுழைய விடாததால் திரும்பி சென்றனர்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத சபாநாயகர் வைத்திலிங்கம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர போவதாகவும் அறிவித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போதே அவமதிப்பு வழக்கை தொடர இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    வருகிற 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சட்டமன்றத்துக்கு நேரடியாக ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாக முடிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த மாதம் 27-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) அனைத்து மானிய கோரிக்கை விவாதத்தை முடிப்பது என்றும், 19-ந் தேதி தனிநபர் தீர்மானத்துடன் சட்டசபை கூட்ட தொடரை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சட்டசபை கூட்ட தொடர் ஒரு வாரம் முன்னதாக முடிகிறது.
    சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    புதுவை கவர்னர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    மேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.

    எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.

    இவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    ×