search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமுருகன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
    • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்.
    • காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டார்.

    அந்த கடிதத்தில், மறைமுகமாக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.

    அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    மேலும், மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிராலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்காலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் சமூகங்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

    ஏனெனில் திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார்.
    • புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை நடக்கிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் தலித் என்பதாலும், பெண் என்பதால் பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

    அதோடு, தனது பணி தொகுதி மக்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தனித்தனியாக அமைச்சர் சந்திர பிரியங்கா அனுப்பியுள்ளார்.

    புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு புதுவை சட்டமன்றத்தில் ஒரு பெண் அமைச்சராக இருந்தார்.

    அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வும் சந்திர பிரியங்காதான். அவரும் ராஜினாமா செய்துள்ளது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

    இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார். சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அவர் திரும்பி விட்டார்.

    அப்போதே ரங்கசாமி, தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார்.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கவர்னர் தமிழிசை மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அதே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் தமிழிசை தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சென்றுவிட்டார். திருமுருகன் அமைச்சர் ஆவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கவர்னர் தமிழிசை இன்று சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை திருமுருகன் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இதில் மாகி, ஏனாமில் தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திரபிரியங்காவும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

    இதனிடையே திருமுருகன் நேற்று மாலை கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை திருமுருகனுக்கு வழங்கினார்.

    ×