search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்தடை நீங்கும்"

    • மவுன யோக நிலையில் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    • குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் ஆகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது.

    ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது.

    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.

    கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.

    இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

     மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர்.

    முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

    சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

    குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறியருளினார்.

    குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

    நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து 'தென் திருக்கயிலாயம்' என்றும், 'பூவுலகின் கயிலை' என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

    ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

    மேற்கு திசை நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு மவுன யோக நிலையில்  இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவும், தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவ வலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர், தென்திசை நோக்கிதான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

    வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    • அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.
    • சிவபெருமான், `கல்யாண சுந்தரரா’க காட்சியளித்தார்.

    மீன ராசியில் சூரியன் இருக்கும் பொழுது, உத்திரம் நட்சத்திரம் வரும் வேளையில் `பங்குனி உத்திரம்' கொண்டாடப்படுகிறது. இதனை `பங்குனி உத்திரம் விரதம்' என்றும் சொல்வார்கள். அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.

    ராமபிரான், சீதா தேவியை மணந்த தினம், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது என்று பல வகையான சிறப்புகள் வாய்ந்தது இந்த நாள். அன்றைய தினம் தெய்வீக திருமணங்களை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை, மிக மிக விசேஷமானதாகும்.

    ராமாயண கல்யாணம்

    அயோத்தி வந்த விஸ்வாமித்திரர், தசரத மகாராஜாவிடம், `வனத்தில் முனிவர்களை யாகம் செய்ய விடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிக்க, ராம- லட்சுமணரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' என்று கேட்கிறார். தசரதரின் ஒப்புதலின் பேரில் ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றனர். அங்கு யாகத்திற்கு இடையூறாக இருந்த தாடகை என்னும் அரக்கியை அழித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில், அகலிகையின் சாபம் ராமனால் நீங்கியது.

    பின்னர் அவர்கள் ஜனகர் ஆட்சி செய்து வந்த மிதிலாபுரி நோக்கி சென்றனர். நிலத்தை உழுத போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்து கிடைத்த ஜனருக்கு கிடைத்த குழந்தைதான், சீதாதேவி. வளர்ந்து நின்ற சீதா தேவியை, 'தன்னிடம் இருக்கும் சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பேன்' என்று ஜனகர் அறிவித்திருந்தார்.

    அதன்படி மிதிலாபுரி வந்த ராம பிரான், சிவ தனுசை தன் புஜபலத்தால் வளைத்தது மட்டுமல்ல, அந்த வில்லை உடைக்கவும் செய்தார். அப்போது ஜனகர், அங்கிருந்த தன்னுடைய புரோகிதரான சதாநந்தரை நோக்கி, "இவர்களுக்கு விவாகம் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்றார்.

    மேலும் "என் மற்றொரு மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கும், என் சகோதரர் குசத்வஜருடைய குமாரிகளாகிய இருவரில் சுருதா கீர்த்தியை சத்ருக்ணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று மகம் நட்சத்திரம். அடுத்த மூன்றாவது நாள் உத்திரம் நட்சத்திரம். அன்றைய தினம் இந்த நான்கு திருமணங்களும் நடைபெற வேண்டும்" என்று கூறினார். அப்படி அந்த நால்வரின் திருமணம் நடைபெற்ற தினமே `பங்குனி உத்திரம்' ஆகும்.

    சாஸ்திரங்களில் 8 விவாகங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அவை பிராம்மம், தைவ்வம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆசுரம், காந்தர்வம், ராட்சஸம், பைசாசம் ஆகியவை ஆகும்.

    இந்த விஷயத்தை இப்போது மிக கவனத்துடன் பார்க்க வேண்டும். எட்டு விவாகங்களில் தற்போது, கன்னிகா தானம் மற்றும் காந்தருவம் (காதல் திருமணம்) மட்டும்தான் வழக்கத்தில் உள்ளது. இதிலும் எந்த இடத்திலும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த மகரிஷியும் கூறவில்லை.

    தற்போது கலியுகத்தில் நாம் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது கூட, பொதுவாக ருது ஆகாத பெண்களுக்கு மட்டும்தான் நட்சத்திர தோஷங்களும் (ஆயில்யம், மூலம்) ஆண், பெண் நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ராசி நிச்சயம், லக்ன நிச்சயம், பெரியோர் நிச்சயம், குரு நிச்சயம், தெய்வ நிச்சயம் என்று ஐந்தையும் வரிசையாக கவனிக்க வேண்டும்.

    லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோரின் திருமண விஷயத்தில், குரு நிச்சயம் தான் செயல்பட்டது. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், சதானந்தர் ஆகியோர் தசரதர் மற்றும் ஜனக மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லி, அதன்படி பரதன், சத்ருக்ணன், லட்சுமணன் ஆகியோரின் திருமணங்கள் முடிந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இருபெரும் முனிவர்கள் சொன்னதை ஜனகரும், தசரத மகாராஜாவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் 'குரு நிச்சயம்' என சொல்லப்படுவது.

     சிவன்- பார்வதி திருமணம்

    முருகப்பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய காரணத்தால், பார்வதி மானுடப் பெண்ணாக பிறக்கிறார். கடும் தவத்தின் பயனாக சிவபெருமானை மணாளனாக அடைகிறார். திருமண நாளின் போது, சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் விபூதி (சாம்பல்) தரித்து, யானைத் தோலில் ஆடை அணிந்து வருகை தந்தார்.

    அப்போது பார்வதி தேவியின் விருப்பத்திற்கு இணங்க, சிவபெருமான் அலங்காரம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்வதி தேவி தன் கையால் சிவபெருமானுக்கு திலகம் விட்டு, வண்ண வண்ண நிறங்களை உடலில் பூசி சிவனை அலங்கரித்தார். சிவபெருமான், `கல்யாண சுந்தரரா'க காட்சியளித்தார். இன்றும் கூட வட தேசங்களில் ஹோலி பண்டிகையின் போது, வண்ண நிறங்களை மற்றவரின் மீது பூசும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

     முருகப்பெருமான் கல்யாணம்

    முருகப்பெருமான் தேவர்களின் வேண்டுகோள்படி, சூரபத்மனை வதம் செய்தார். முருகப்பெருமானின் அரிய செயலுக்காகவும், தேவர்களின் துயரை அவர் துடைத்தெரிந்த காரணத்தாலும், தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி எனப்படும் பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

     ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார், துளசி வனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அந்த பிள்ளைக்கு `கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவளே பின்னாளில் `ஆண்டாள்' என்றானார். ஆண்டாளுக்கு பங்குனி உத்திரம் அன்றுதான் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதைக் காணலாம்.

    கடுமையான தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, காம பாணம் செலுத்தி அவரது தியானத்தைக் கலைத்தான் மன்மதன். இதனால் அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார், சிவபெருமான். பின்னர் ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனை உயிப்பித்துக் கொடுத்தார். அந்த நாளும் பங்குனி உத்திர திருநாள்தான். இது தவிர பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், ஐயப்பன் அவதரித்ததும் இந்த நன்னாளில்தான்.

    இந்த நாளில் புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராடி, ஆலயங்களில் நடைபெறும் தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மிக மிக விசேஷம். பலர் விரதம் இருந்து பழனி, சுவாமிமலை போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்திராணி இந்த விரதத்தை கடைப்பிடித்து இந்திரனை திருமணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம். சரஸ்வதியும் இந்த வரத்தை கடைப்பிடித்துதான், பிரம்மாவை மணம் புரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

    இந்த பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து தெய்வீக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் (ஆண், பெண்) அனைவருக்கும், இதுநாள் வரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மேலும் இந்த நாளில் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை காண்பவர்கள், திருமணம் ஆகி பிரிந்து இருந்தால் அவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்பு உண்டாகும்.

    • மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு.
    • சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம்.

    ஆலயத் தோற்றம்

    நம் பாரதத்தில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு. அப்படி ஒரு ஆலயம்தான், சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம். திரவுபதியுடன் பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த நேரத்தில், உபமன்யு முனிவரிடம் ஆசி பெறுவதற்காக தில்லை வனத்திற்கு வந்தனர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்படி அவர்கள் வந்து தங்கியிருந்த இடத்தில்தான், தற்போது திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு காலச் சூழல்களில் சிதிலமடைந்ததன் காரணமாக, சமீப காலங்களில் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.

     இந்த ஆலயம் பல காலமாக சிதிலமடைந்து கிடந்ததால், அதில் இருந்த அம்மனை மட்டும் ஒரு இடத்தில் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். ஒரு முறை திரவுபதியை வணங்கும் ஒரு பெண்ணிற்கு, கிணற்றில் குதித்து நீராடுவது போல் கனவு வந்துள்ளது.

    கனவில் கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்த பக்தையை, கரையில் நின்ற ஒரு பெண் பார்த்து, "நீ தினமும் நீராடுகிறாய்.. நான் எவ்வளவு நாளைக்கு தான் நீராடாமல் இருப்பது?" என்று கேட்டு புன்னகைத்தாளாம். அதற்கு அந்த பக்தை, "யாரம்மா நீ?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் "இந்த இடத்தின் சொந்தக்காரி" என்று கூறி மறைந்துவிட்டாளாம்.

    தான் கண்ட கனவை மறுநாள் காலையில் வீட்டாரிடமும், ஊர்க்காரர்களிடமும் அம்மனை வழிபடும் பெண் கூறியிருக்கிறார். மேலும், "என் கனவில் வந்தது வேறு யாருமல்ல. இங்கே சிதைந்து கிடக்கும் ஆலயத்தில் இருந்தபடி நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் திரவுபதி அம்மன்தான்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அந்த ஊர் மக்கள் சார்பில், சிதைந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திரவுபதி அம்மனின் அருளால் ஆலயம் கட்டும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சிறு ஆலயமாக கட்டி முடித்து குடமுழுக்கும் செய்தனர்.

    அதன்பிறகு ஆலயம் மீண்டும் சிதலமடைந்து சுமார் 50 ஆண்டு காலமாக அப்படியே இருந்தது. இதையடுத்து மீண்டும் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தை திருப்பணி செய்து புதுப்பித்தனர். இந்தப் பணி 1988-ம் ஆண்டு தொடங்கி, 1989-ம் ஆண்டு முடிந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் ஆலயம் முன் மண்டபம் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     ஆலய அமைப்பு

    ஆலய முகப்பில் இருப்பது சுப மண்டபம். அதனுள் நுழைந்தால், கருடாழ்வார், கொடிமரம், பலிபீடம், நந்தி, காவல் தெய்வமான முத்தால் வழிவகுத்தார், விநாயகர், பாலமுருகன், அரவான், உள்ளடியார், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கருவறையில் திரவுபதி அம்மன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு திருக்கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் சன்னிதிகள் இல்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து 9 வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூசணிக்காய், அன்னாசிபழம் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், அர்த்த மண்டபத்தில் அம்மனுக்கு நேராக தலை வாழை இலை போட்டு, அதில் அட்சதை நிரப்பி, அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்காகவும் இங்கே வழிபாடு செய்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இந்த ஆலயத்தின் சுப மண்டபத்தில் வைத்து வளைகாப்பு செய்து கொள்கிறார்கள். அப்போது திரவுபதி அம்மனிடம் இருந்து பெறப்பட்ட வளையலையே, முதல் வளையலாக கருவுற்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள்.

     இவ்வாலயத்தில் வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் பெருந்தீமிதித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தவிர கார்த்திகை தீப விழா, ஆடி கடைசி வெள்ளியில் திருவிளக்கு பூஜை, மாத பவுர்ணமி பூஜை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வீரராகவன் தெரு வழியாக சென்றால் ½ கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம்.

    ×