search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் கொள்ளை"

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
    • சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு சீனிவாசன் தனது தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அந்த கும்பல் கலையரசி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

    அப்போது குழந்தைகள் இருவரது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுக்குமாறு கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி என்ன செய்வது என்று தெரியாமல் அலறினார். சத்தம் போட்டால் குழந்தைகளை கொன்று விடுவோம் என மிரட்டிய அந்த கும்பல் 5 பீரோக்களையும் உடைத்து திறந்தனர். அதில் இருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து ஒரு சூட்கேசில் வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த விவரங்களை தனது கணவரிடம் கலையரசி தெரிவித்தார். உடனே வேடசந்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன், வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பதால் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அக்கம் பக்கத்தினர் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் டாக்டர் தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப்போட்டு 100 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மட்டும் கொடைரோடு அருகே சிக்கியது. இதனால் கொள்ளை கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    இருந்தபோதும் அந்த வழக்கில் இன்னும் உண்மை குற்றவாளிகள் பிடிபடவில்லை. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் முடியாததால் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பான எந்திரம் என்பதால் அதனை சேதப்படுத்த முடியவில்லை. நீண்டநேரம் போராடிவிட்டு பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம் எந்திரம் சேதப்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது தெரியவந்தது. எனினும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் தம்பதியை கட்டிபோட்டு 110 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த கார் ஆகியவற்றை முகமூடிகும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    • கொள்ளையில் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் கொடைரோடு அருகே மீட்கப்பட்டதால் அவர்கள் ரெயிலில் தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் கோபி(45). இவர் வயலூரில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சர்மிளா(38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்றிரவு கோபி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் திடீரென குழந்தைகள் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். பின்னர் ஒருவர் சர்மிளாவின் கழுத்தில் கத்தியை வைத்தபடி வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டினர்.

    இதனைதொடர்ந்து சர்மிளா வீட்டில் இருந்த 27 பவுன் நகையை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அங்கிருந்த செல்போன்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கொள்ளையர்கள் தப்பினர்.

    அதன்பிறகு அருகில் உள்ள கருணாகரன் என்பவரது வீட்டிற்குள்ளும் புகுந்தனர். இதேபாணியில் கத்தி முனையில் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து தருமாறு அந்த கும்பல் மிரட்டியது.

    கருணாகரன் மனைவியிடம் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அருகில் இருந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அதற்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகரித்ததால் கிடைத்தவரையில் லாபம் என நினைத்து நகை பணத்துடன் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து பழனி தாலுகா போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தலைமையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் கைரேகை நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் தம்பதியை கட்டிபோட்டு 110 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த கார் ஆகியவற்றை முகமூடிகும்பல் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையில் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் கொடைரோடு அருகே மீட்கப்பட்டதால் அவர்கள் ரெயிலில் தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

    தற்போது அதேபாணியில் பழனி புறநகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×