search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் பலி"

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. #swineflu
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 47). கார்கில் போரில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 10 ராணுவ வீரர்களில் இவரது தம்பி செய்யது சத்தாரும் ஒருவர்.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்துல்ரகுமானுக்கு நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் வேலை வழங்கப்பட்டது.

    இவர் துறைரீதியாக தேர்வு எழுதி தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும் பணியாற்றினர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் கோத்தகிரி ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலம் எடுப்பு பிரிவில் தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்குள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதியில் இருந்து அப்துல் ரகுமான் அதிகப்படியான சளி, இருமலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை.

    இதையடுத்து அப்துல் ரகுமானை அவரது குடும்பத்தினர் கடந்த 29-ந் தேதி கோவைக்கு அழைத்து வந்து ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அப்துல் ரகுமானுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அப்துல் ரகுமானுக்கு நோயின் வீரியம் குறையவில்லை. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அப்துல் ரகுமானை நேற்று முன்தினம் இரவு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பிரிவில் உரிய சிகிச்சை பெற்று வந்த அப்துல்ரகுமான் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்துல் ரகுமான் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பன்றிக்காய்ச்சலுக்கு பலியான அப்துல்ரகுமானின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். இவரது தந்தை சலாம் மின்வாரியத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்துல் ரகுமானுக்கு ரகுமத் நிஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூரை சேர்ந்த வசந்தா என்ற பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இந்த நிலையில் தாசில்தார் அப்துல்ரகுமானும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலருக்கு பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    தாசில்தார் அப்துல் ரகுமானின் குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து அதை தடுப்பதற்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    இதே போல் அப்துல் ரகுமான் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலும் சுகாதாரத்துறையினர் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி உள்ளார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் மூலம் கோவை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேட்டுப்பாளையத்திலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக தாசில்தார் அப்துல் ரகுமான் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சளி, இருமல் அறிகுறியுடன் கடந்த சில நாளில் வந்து சிகிச்சை பெற்றவர்கள் யார் என விபரங்கள் தருமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். #swineflu
    புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார், விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன் (வயது 52). நேற்றிரவு விராலிமலை சூரியூர் பஞ்சாயத்து வில்லாரோடை கிராமத்தில் உள்ள கோரையாற்றில் மர்மநபர்கள் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் விராலிமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் வில்லாரோடை பகுதிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் இன்று அதிகாலை அலுவலகத்திற்கு திரும்பினர்.

    விராலிமலை ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் வரும் போது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாசில்தார் பார்த்தீபன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது.

    விபத்தில் பலியான தாசில்தார் பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    ×