search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிர் ஆதித்ய சிந்தியா"

    • இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் விமான போக்குவரத்து துறை செயல்பாடுகள் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கான கொள்கைகளால் உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக நாம் மாறியுள்ளோம்.

    இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட) மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது 148 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த 2013-14-ம் ஆண்டில் இந்தியா 6 கோடி உள்நாட்டு பயணிகளை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 135 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைப்போலவே சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் (4.7 கோடியில் இருந்து 7 கோடியாக) அதிகரித்து இருக்கிறது.

    மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, கடந்த 2014-ல் 400 ஆக இருந்த விமானங்கள் தற்போது 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

    இது வெறும் தொடக்கம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் 1,200 முதல் 1,400 புதிய விமானங்கள் வரை வாங்குவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர்களை வழங்கும்.

    இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளில் ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயரும்.

    அடுத்த சில ஆண்டுகளில் விமான நிலையத்துறை ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை பெறும்.

    இதைப்போல 2030-ம் ஆண்டுக்குள் நாம் ஆண்டுதோறும் 45 கோடி உள்நாட்டு பயணிகளை பார்க்கலாம். விமான நிலையங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

    • நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது.
    • சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர் -மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை, 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

    நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

    சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டு உள்ளனர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர்.

    சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 3 முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது.

    சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.

    புதுடெல்லி :

    டெல்லி-தர்மசாலா-டெல்லி மார்க்கத்தில் இண்டிகோ விமான சேவையை டெல்லியில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    சிவில் விமான போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் நடத்த முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோடிராம்கள், ஹெலிபோர்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

    பெரிய அளவிலான மாநகர விமான நிலையங்களுக்கும், கடைக்கோடியில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படும்.

    தர்மசாலா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இதற்கு 2 கட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தற்போதைய ஓடுதளம் 1900 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஓடுதளம் 3110 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இதனால் போயிங் 737, ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்கள் தரையிறங்க முடியும்.

    சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    சிவில் விமான போக்குவரத்து துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது,

    மேலும் விமானம் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்களும் இன்று விமானங்களில் பறக்கிறார்கள்.

    இமாசலபிரதேசத்தில் 2013-14-ம் ஆண்டில் வாரத்துக்கு 40 விமான சேவை இருந்தது. இப்போது 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 110 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

    தர்மசாலாவில், வாரத்துக்கு 28 விமான சேவை என்பது தற்போது 50 என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×