search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புக் கட்டுரை"

    • சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
    • வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும்.

    தோஷங்களில் பிரம்மஹத்தி தோஷம் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும். மிக மிக கொடுமையான பாவங்கள் செய்தவர்களைதான் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கொலை செய்பவர்களை இந்த தோஷம் ஜென்ம ஜென்மமாக விரட்டும் என்று சொல்வார்கள்.

    பிரம்மன் உருவாக்கிய உயிரை துன்புறுத்தி பறிக்கும்போது இந்த தோஷம் தலை முறைகளை கடந்தும் தொடர்ந்து விரட்டும் என்று சொல்வார்கள். பிரம்மனின் தலையை துண்டித்ததால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மகிஷாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் சப்தகன்னியர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவரான வரகுண பாண்டியன் அறியாமல் வீரசேனன் என்ற பிராமணரை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற் பட்டது.

    இவர்கள் எல்லாம் பரிகாரம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார்கள். ராமர் ராமேசுவரத்தில் வழிபாடு செய்து தனது தோஷத்தை போக்கி கொண்டார். வரகுண பாண்டிய மன்னன் திருவிடை மருதூர் ஆலயத்தில் பூஜைகள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டியடித்தார்.

    கொலைப்பழியால் மட்டுமே பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள். தீராத பாவங்கள் என்ன செய்தாலும் இந்த தோஷம் உடனே பிடித்து தொங்கிக்கொண்டு வந்து விடும். பெற்ற தாய்-தந்தைக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்துபவர்கள், பெற்றோரை வீட்டை விட்டு விரட்டுபவர்கள், பசுக்களை துன்புறுத்தி கொல்பவர்கள், உதவி செய்தவர்களுக்கு துரோகம் செய்பவர்கள், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை அலட்சியம் செய்பவர்கள், கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், நன்றி மறந்து துன்பத்தை விளைவிப்பவர்கள் போன்றவர்களுக்கு கண்டிப்பாக பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.

    சிலர் இளம் வயதில் காதல் வயப்பட்டு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்கி றேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றினாலும் இந்த தோஷம் வரும். கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களையும் இந்த தோஷம் தாக்கும். சிலர் கடுமையாக வேலை வாங்கி விட்டு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள் அத்தகையவர்களையும் இந்த தோஷம் பாதிக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும். பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் பாதிக்கப்பட்டதை பெரும்பாலானவர்கள் உணருவது இல்லை. பிரம்மஹத்தி தோஷம் என்பது ஒவ்வொரு வகையிலும் பாதிப்புகளை வாழ்க்கையில் கொடுத்து கொண்டே இருக்கும். மிக கொடிய பாவங்கள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர் களுக்கு வாழ்க்கையில் நிழல் போல பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும்.

    மனைவியால் நிம்மதி இருக்காது அல்லது குழந்தைகளால் பிரச்சினை வரும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். கல்வியில் மேம்பாடு இருக்காது. குலதெய்வத்தால் உரிய உதவிகள் கிடைக்காது. சிலருக்கு திறமைகள் இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. இவை யெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தால் வரும் இடையூறுகள் ஆகும்.

    ஜாதக ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால் ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்த்தாலும் அல்லது குருவின் சாரத்தில் சனியும், சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும் அது பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும்.

    சனியும், குருவும் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்தாலே அதை கண்ணை மூடிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷக்காரர் என்று சொல்லி விடுகிறார்கள். குறிப்பாக ராகு இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9-ம் வீட்டில் சனியும், குருவும் சேர்ந்து இருந்தால் கடுமையான பிரம்மஹத்தி தோஷத்துக்கு உரியவர் என்று ஜோதிட உலகம் சொல்கிறது.

    இதற்காக கவலைப்படவோ, பயப்படவோ வேண்டிய அவசியம் இல்லை. எல்லா வற்றுக்கும் பிரார்த்தனையும், பரிகாரங்களும் இருப்பது போல பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டி அடிக்கவும் பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை எந்த ஆலயத்துக்கு சென்று எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியமானதாகும்.

    பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் இருப்ப தாக சொல்லப்பட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள ஆலயங்க ளுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும். வழிபாடு முடிந்ததும் எவ்வளவு ஏழைகளுக்கு உங்களால் அன்னதானம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஆலய வழிபாடு முடிந்த பிறகு உடைகள் வாங்கி கொடுத்து ஆசி பெறுவது பிரம்மஹத்தி தோஷத்தை விரட்ட உதவும்.

    பொதுவாக பிரம்ம ஹத்தி தோஷம் என்றதும் அனைத்து ஜோதி டர்களுமே திருவிடை மருதூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய் யும்படி சொல்வார்கள். இந்த ஆலயத்துக்கு வழிபாடு செய்ய செல்பவர்கள் தலைவாசல் வழியாக சென்று வழிபாடுகள் செய்துவிட்டு ஆலயத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும். இந்த வழிபாடு மூலம் பிரம்மஹத்தி தோஷம் திருவிடைமருதூர் ஆலயத்தின் தலை வாசலிலேயே தடைபட்டு நின்று விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்தால் இந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள். ராமேசுவரம் கடலில் நீராடி ஆலயத்துக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் குளித்து வழிபாடுகள் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி பலன் கிடைக்கும். அதுபோல ராேமசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி அந்த தலத்து ஈசனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்கிறார்கள்.

    இந்த தலத்தில்தான் ராமர் தனது தோஷத்தை போக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழிக்கு அருகே திருமுல்லைவாசல் என்று அழைக்கப்படும் ஊரில் இருக்கும் முல்லை வனநாதரை வழிபட்டாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதாக சொல்கிறார்கள்.

    காஞ்சீபுரம், திருப்புல்லானி, திருவண்ணா மலை, மதுரை, ஸ்ரீவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர், கோவை மஞ்ச நாயகனூர் அமணீஸ்வரர், சிவ கங்கை திருப்பாசேத்தி திரு நோக்கிய அழகியநாதர், அரியலூர், கீழபழுவூர் ஆலந்துறையார், தஞ்சை கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர், திருவாரூர் கோட்டூர் கொழுந்தீஸ்வரர், வேதாரண்யம் திருமுறை காடர் ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் நீங்கும்.


    இந்த ஆலயங்களுக்கு செல்ல இயலாது என்று நினைத்தால் கவலையே வேண்டாம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மாலை 5 மணிக்கு 9 சுற்றுகள் சுற்றி வந்து வழிபடுவது நல்லது. 9 அமாவாசை நாட்களில் வழிபாடுகள் செய்வது மேலும் நல்லது. இந்திரன், வரகுண பாண்டியன் ஆகியோர் இப்படி சிவபெருமானை வழிபட்டுதான் தங்களது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

    ஆலயங்களுக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வயதானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கலாம். வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு தேவையான உணவு, உடை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது ஆசியை பெற்றாலே பிரம்மஹத்தி தோஷம் தானாக விலகும் என்று புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    எனவே பிரச்சினைகள் தரும் பிரம்மஹத்தி தோஷத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு அது எந்த அளவுக்கு தோஷமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங் கள். அதை 3 வகைகளில் நிவர்த்தி செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பூஜைகள், வழிபாடுகள் செய்தால் பலன்களை பெற முடியும்.

    • முதல் படம் ‘ஒரு புதிய கதை’ எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.
    • காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார்.

    குயில் பாட்டு...

    ஓ வந்ததென்ன

    இளமானே...

    அதைகேட்டு

    ஓ செல்வதெங்கே

    மனம் தானே...

    -மனதை மயக்கும் இந்த பாடலை மறக்க முடியுமா?

    மஞ்சள் வண்ணத்தில் தாவணி போட்ட பெண்ணாக பசுமையான மரம், செடி, கொடிகளுக்கிடையே துள்ளிக்குதித்து ஆடிபாடி வருவேனே... மறந்திருக்க மாட்டீர்கள்!

    என் ராசாவின் மனசிலே...

    இந்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆம் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று நினைத்து கொண்டிருக்கையில் ஒரு நாள் படக்குழுவில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். கஸ்தூரிராஜா சார் வரச் சொல்லி இருப்பதாக கூறினார்கள்.

    அவரை சந்தித்ததும் தேர்வு செய்திருப்பதாக கூறினார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே நேரம் மனசுக்குள் ஒருவித பயம். முதல் படம் 'ஒரு புதிய கதை' எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. இந்த படமாவது 'ஹிட்' ஆக வேண்டும் கடவுளே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.

    சோலையம்மா...

    இதுதான் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம். முதல் நாள் ஷூட்டிங். திண்டுக்கல் பக்கம் படப்பிடிப்பு. முதல் முதலில் வீட்டில் என்னை சந்தித்த போது என்ன டயலாக்கை கொடுத்து பேச சொன்னாரோ அதே டயலாக்கை பேசியபடிதான் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

    காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார். அதை கேட்டதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம்.

    2-வது நாள் ஷூட்டிங்குக்குதான் ஹீரோ ராஜ்கிரண் வந்தார். எனக்கு ஜோடியான அவரை பார்த்ததும் ஜோடி பொருத்தம் எப்படி அமையும்...? என்று மனதுக்குள் நினைத்தேன்.

    படத்தின் கதைப்படி ஹீரோ முரட்டுக் குணம் உடையவர். ஹீரோயின் அப்பாவி பெண். இந்த பாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்பதில் ராஜ்கிரண்தான் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை சுமார் 25 வருடங்களுக்கு பிறகு மீனா-40 நிகழ்ச்சியின் போது அவரே சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

    சினிமா உலகில் தயாரிப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் ராஜ்கிரண். 'என் ராசாவின் மனசிலே' படம்தான் அவருக்கும் முதல் படம். படத்தின் கதை தயாரானதும் சோலையம்மா பாத்திரத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்கள்.

    அப்போது ஒரு வார இதழில் எனது புகைப்படத்தை ராஜ்கிரண் பார்த்திருக்கிறார். தனது சோலையம்மா பாத்திரத்துக்கு இவர்தான் ஏற்றவர் என்று கருதி கஸ்தூரிராஜா சாரிடம் போய் சொல்லி அந்த பெண்ணை தேடி பிடித்து ஒப்பந்தம் போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

    ஆனால் கஸ்தூரிராஜா சார் ஒத்துக் கொள்ளவில்லை. மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறார். உங்களுக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று மறுத்து இருக்கிறார். ஆனால் ராஜ்கிரண் 'சின்ன பெண்ணாக இருந்தாலும் சோலையம்மா கேரக்டருக்கு அவர்தான் வேணும். போங்க என்று அனுப்பி இருக்கிறார். அப்படித்தான் என்னை தேடி வந்திருக்கிறார்கள்.

    நிஜமாகவும் நான் ராஜ்கிரணை பார்த்து பயந்தது உண்மை. படத்தில் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்தேனே தவிர அவரிடம் பேசியது கூட கிடையாது. அம்மாதான் எனக்கு தைரியம் சொல்லி உருவத்தை வைத்து எடை போடாதே. அவரும் நல்ல மனிதர்தான் என்பார். உண்மையிலும் அவர் அப்படித்தான். பார்்க்க அப்படி இருப்பார். ஆனால் ரொம்ப சாப்டானவர்.

    அப்போதெல்லாம் இந்த காலகட்டத்தை போல் நவீன வசதிகள் கிடையாது. ஒரு பாடலை ஒரே நாளில் படமாக்க வேண்டும். ஒரு பாடலுக்கு நான்கைந்து காஸ்ட்யூம் இருக்கும். ஆனால் உடைமாற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த காலகட்டத்தை போல் 'கேரவன்' வசதியெல்லாம் கிடையாது.

    எங்காவது ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடக்கும். உடை மாற்றுவதற்காக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்றுவிட்டு வரமுடியாது. காரை நிறுத்திவிட்டு கார் மறைவிலோ, மரங்களின் மறைவிலோ நின்று அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டு ஷூட்டிங்க்கு ஓடுவேன்.

    சோலையம்மா கேரக்டருக்கு பெரிய அளவில் மேக்-அப் எதுவும் கிடையாது. கிராமத்து அப்பாவி பெண்ணாகவே நடிக்க வேண்டும். அந்த படத்தில் ஸ்ரீவித்யா எனக்கு பாட்டி. அடிக்கடி அவருக்கு பின்னால் ஒளிந்து நின்றபடிதான் பேச வேண்டும்.

    இதனாலேயே அவர் அடிக்கடி என்னை பார்த்து "என்ன... பூனைக்குட்டி எப்படி இருக்கே" என்று செல்லமாக அப்படியே கேட்பார்.

    அந்த படத்தில் நடித்ததே வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. முரட்டு குணம் கொண்டவராக நடித்த ராஜ்கிரண் காட்சியிலும் பார்க்கும் போது அச்சு அசலாக இருப்பார்.

    ஒரு காட்சியில் அவருக்கு சோறும், கறிக்குழம்பும் கொடுக்கும் போது நல்லி எலும்போ... சூப்பு எலும்போ எதுவாக இருந்தாலும் அள்ளிபோடு. மென்று கடிச்சு புடுறேன் என்றபடி ஆட்டிறைச்சி எலும்பை எடுத்து கடிப்பார். நீண்ட நேரமாக அதை கடித்து கொண்டே இருப்பார். நாங்கள் ஆச்சரியமாக பார்ப்போம். காரணம் அவர் கதையில் ஒன்றி விடுவதுதான்.

    சின்ன வயசு. ஆனால் ஹெவி கேரக்டர். இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். சோலையம்மா பாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்கும்படி என் முழு திறமையையும் செலுத்தி நடித்தேன். அடுத்த வாரமும் சோலையம்மாவாக இன்னும் சில முக்கியமான மறக்க முடியாத சம்பவங்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன்...

    (தொடரும்...)

    • உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
    • பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    2014-ம்ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21-யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யோக சூத்திரம்: பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.

    இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகிவிட்டது.

    இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.

    யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி:

    உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

    மகராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்டபோது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் கிளாட் வேட் ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.

    1986-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் பிரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.

    'தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. ஆகவே இது சாத்தியமாகிறது' என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.

    1927-ம் ஆண்டு பாரீசில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த - மிதக்கும் - 'லெவிடேஷன்' சக்தி இது என்று அவர் கூறியபோது அனைவரும் வியந்தனர்.

    யோகம் தரும் பயன்கள்: தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும். நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.


    சில பயன்களின் பட்டியல் இதோ:

    1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

    3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஓய்வை உறுதி செய்கிறது.

    4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது லட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

    5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

    6) அகங்காரத்தை நீக்குகிறது.

    7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

    8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

    9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

    10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகசச் செயல்களைச் செய்ய முடியும்.

    11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

    12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

    13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

    14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

    15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

    16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

    17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

    18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

    19) இதற்கு வயது வரம்பு கிடையாது.

    20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

    21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

    23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

    24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.

    25) உடலை மேம்படுத்தலாம்.

    26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

    27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

    28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

    29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

    30) கெட்ட கனவுகள் அகலும்.

    31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

    32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

    34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

    35) வெட்கம் அகலும்.

    36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.

    தலாய்லாமாவின் அழைப்பு: 2000-ம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார்.

    விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார்.

    யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார்.

    மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார்.

    ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் 'தயை' என்னும் தியானம் லாமாவின் மூளையில் இடது பக்க பிரண்டள் கைரசின் செயல்பாட்டைக் காண்பித்தன.

    இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

    வலதுபக்க பிரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். 'தயை தியானத்தில்' லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப்படுத்தியது.


    அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர்.

    திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ 'ஓபன் ஸ்டேட்' என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார்.

    இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.

    பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.

    பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்) வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோசீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    மகரிஷி மகேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

    கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, "உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா" என்று கூறுகிறது.

    யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்துவிடவில்லை!
    • ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது.

    பூமியில் பிறந்த எல்லோரையும் சிறப்புப்பெயர் சொல்லி அனைவரும் அழைப்பதில்லை! புகழுடம்போடு பூமியில் வாழ்ந்து சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கரம்சந்த் காந்தி உலகமக்களால் "மகாத்மா காந்தி" என்று அழைக்கப்பட்டார். காமராஜர் "பெருந்தலைவர் காமராஜர்"என்றும், இ.வெ.ராமசாமி நாயக்கர் "பெரியார்" என்றும், அண்ணா "அறிஞர்" என்றும், கருணாநிதி "கலைஞர்" என்றும் ஒருமனதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல் பெரிய அய்யா சி.பா.ஆதித்தனார் தமிழ் மக்களால் "தமிழர் தந்தை" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

    இந்த "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்து விடவில்லை! அவரின் உடலில்... உள்ளத்தில்... அதன் அடித்தளத்தில்... அதன் ஆணிவேரில்... இளம் வயது முதல் இறக்கும் நாள்வரையில் உயிர்மூச்சாய் இணைந்திருந்த தமிழ்பற்றும், 'தமிழன்' என்ற நீங்காத நினைவு, முயற்சி, உழைப்பு, பாரிஸ்டர் பட்டம், பத்திரிகையாளர், நாம் தமிழர் இயக்கத் தலைவர், அரசியல், மொழிப்போர், மேலவை உறுப்பினர், பேரவைத்தலைவர், அமைச்சர், உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு என்ற அனைத்தும்தான் அவருக்கு "தமிழர் தந்தை" என்ற சிறப்பைத் தந்து தன்னைச் சிறப்பித்துக்கொண்டது!

    27-9-1805-ல், திருநெல்வேலி மாவட்டம் (தூத்துக்குடி) திருச்செந்தூருக்கு அருகே, காயாமொழி என்ற பிரபலமான ஊரில், சிவந்திஆதித்தனார்- கனகம் அம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவருக்கு பாலசுப்பிரமணிய ஆதித்தன் என்று பெயர் சூட்டினார்கள். அந்த சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனார், பிற்காலத்தில் தன் பெயரை சி.பா.ஆதித்தன் என்று சுருக்கிக் கொண்டார். தந்தை சிவந்திஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் மிகப்பெரிய வக்கீலாகப் பணியாற்றினார். தமையனார் எஸ்.டி.ஆதித்தனாரும் சிறந்த வழக்கறிஞர்தான்! எனவே தானும் படித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று எண்ணிய ஆதித்தனார் சிறுவயதிலேயே படிப்பில் கெட்டிக்காரராக விளங்கினார். தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை ஸ்ரீவைகுண்டத்தில் படித்த சி.பா. ஆதித்தனார் தமிழ்மீது தாழாத பற்றும், பாசமும் கொண்டிருந்ததன் காரணமாக, அந்தக்காலத்தில் விருப்பப்பாடமாக பெரும்பாலானவர்கள் சமஸ்கிருதத்தைத் தேர்வுசெய்து படித்துக்கொண்டிருந்தாலும், தனது தமையனார் எஸ்.டி. ஆதித்தன் சம்ஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தும்கூட, தான்மட்டும் தமிழையே விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தார்.

    சின்னவயதிலேயே தமிழ்அறிவோடு, கற்பனைத்திறனும் கைவறப் பெற்றிருந்ததன் காரணமாகத் தன் பதினைந்தாம் வயதில் கல்கத்தாவில் பிரபலமாக விளங்கிய நறுமணப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையினர் தங்கள் கம்பெனி விளம்பரத்திற்கான சிறந்த கற்பனை ஓவியம் தீட்டி அனுப்பும் சிறந்த ஒருவருக்குப் பரிசு தருவதாக அறிவித்திருந்ததைக் கண்ணுற்ற அய்யா அவர்கள் தீட்டிய கருத்தோவியத்திற்கு முதற்பரிசு பெற்றார்.

    பள்ளி இறுதிவகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட சி.பா.ஆதித்தனார் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பவுதீகப் பாடப்பிரிவில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். தமிழிலும், கற்பனைத்திறனிலும் சிறந்துவிளங்கிய ஆதித்தனார் படிப்பில் சிறந்தவராகவும், விளையாட்டு வீரராகவும் விளங்கினார். கல்லூரியிலேயே ஒரு கால்பந்தாட்டக் குழுவை ஆரம்பித்து, வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். அந்தக்குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார். அந்தவயதிலேயே அவரின் தலைமைப்பண்பு வெளிப்படத்து வங்கிவிட்டது என்பதுதான் உண்மை!

    கல்லூரியின் தமிழ் இலக்கியச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்த ஆதித்தனார் தமிழ் இலக்கியப் புத்தகங்களை வாங்கித் தான் படித்ததோடு, சங்கத்தில் உள்ள உறுப்பினர்களையும் இலக்கியம் படிக்கவைத்தார். திருச்சியில் அவரின் தமிழ்ப்பணி தொடர்ந்தது. படிக்கும்காலத்திலேயே தமிழார்வத்தின் காரணமாக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கி 'ஆர்ட்ஸ் புக் கம்பெனி' என்ற பெயரில் அச்சகம் நடத்தி, பயனுள்ள புத்தகங்களைப் பிரசுரித்து விற்பனை செய்து பணம் சம்பாதித்தார் என்பது படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் சாத்தியப்படாத ஓன்று என்றாலும், ஆதித்தனாருக்கு மட்டும் எல்லாமே சாத்தியமானதாகவே அமைந்திருந்தது என்பதுதான் உண்மை!

    கல்லூரிக்காலத்தில் நடத்திய பதிப்பகத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்திற்குப் போதுமான வருமானம் வந்தது. ஆனால் அந்த வருமானத்தைத் தான் செலவு செய்யாமல், தனது லட்சியமான, தமிழ் வளர்த்தலுக்கும், விளையாட்டில் திறன்பெற்று விளங்குதற்குமே செலவிட்டார்! பி.ஏ. தேர்ச்சிபெற்றவர், அதே கல்லூரியிலேயே எம்.ஏ.யும் பயின்று, பட்டம் பெற்றுக்கொண்டு, சட்டம் படிப்பதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் 1928-ல், பி.எல். வகுப்பில் சேர்ந்தார். கூடவே, திருச்சியில் நடத்திவந்த அச்சுக்கூடத்தையும் சென்னைக்கு எடுத்து வந்து, அச்சகத்தில் அச்சகத்தை நிறுவி, பயனுள்ள புத்தகங்களைப் பதிப்பித்தார். இதன் காரணமாக, அக்காலத்தில் பிரபலமாயிருந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி.ஸ்ரீ.ஆச்சார்யாவுடன் நட்பு கிடைத்தது. அவர்மூலமாக அவரின் நண்பரும், சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியருமான சி.ஆர்.சீனிவாசனிடம் பழக்கம் ஏற்பட்டது. சீனிவாசனின் மூலம் 'இந்து' ஆசிரியர் ஏ.ரெங்கசாமியின் நட்பு கிடைத்தது. கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த ஒரு மாணவரின் நட்பு வட்டம், மாணவர்களைத்தாண்டி, எழுத்தாளர்கள்... பத்திரிகையாளர்கள் எனவிரிய முடிந்ததென்றால் அது ஆதித்தனார் அவர்களின் ஆளுமைத்தன்மையால்தான் என்பதை உணரமுடிகிறது! சட்டக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தவருக்கு லண்டன் சென்று பார்-அட்-லா படித்தால் மதிப்பும், மரியாதையும், சம்பாத்தியமும் அதிகமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டதால், சட்டக்கல்லூரியில் இருந்து விலகி, லண்டன் செல்ல முடிவெடுத்தார். உடனடியாக சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசனிடம் பேசி, லண்டனில் இருந்து தான் அனுப்பும் செய்திகளைப் பிரசுரம் செய்து, தன்னை லண்டன் நிருபராக ஏற்றுக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டுத் தான் ஆதித்தனார் துணிச்சலாக லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டப்படிப்பில் சேர்ந்ததோடு, லண்டன் செய்திகளை சுதேசமித்திரனுக்கு உடனுக்குடன் எழுதி அனுப்பினார். சுதேசமித்திரனோடு மட்டும் அவரின் நிருபர் பணியை நிறுத்திக்கொள்ளாமல், 'டைம்ஸ் ஆப் இந்தியா' 'ஆஜ்'என்ற உருது பத்திரிகை, இன்னும் சில ஆப்பிரிக்கப் பத்திரிகைகளுக்கும் செய்திகள் அனுப்பினார். லண்டனில் வெளிவந்து கொண்டிருந்த 'ஸ்பெக்டேட்டர்' என்ற ஆங்கில பத்திரிகைக்கும் செய்தி தந்து, தனது பாரிஸ்டர் படிப்பிற்கான முழு தொகையினையும் சம்பாதித்துக் கொண்டார் என்பது ஆதித்தனாரின் உழைப்பும், உயரிய நோக்கமும் 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது!

    1931-ம் ஆண்டு லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வருகைதந்த 'மகாத்மா' காந்தியுடன் சென்னையில் இருந்து 'இந்து' பத்திரிகை ஆசிரியர் ரெங்கசாமியும் வந்திருந்தார். ரெங்கசாமி 'மகாத்மா' காந்தியிடம் சி.பா.ஆதித்தனாரை அறிமுகம் செய்து வைத்தார். அதனால் ஆதித்தனார் காந்தியிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றதோடு, அவரைப்பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் சுதேசமித்திரனுக்கு அனுப்ப முடிந்தது. ஒருமுறை காந்தி பேசிக்கொண்டிருந்த போது, பேச்சை நிறுத்திவிட்டு வெளியேறிச் சென்றவர், சிறிதுநேரம் கழித்தே திரும்பிவந்தார். அதன் காரணத்தை அவரிடமே கேட்டு, "காந்தி தனது பேச்சின் இடையேவெளியில் சென்று, ஆடிக் கொண்டிருந்த ஒரு பல்லைப் பிடுங்கிப்போட்டுவிட்டுத் திரும்பினார்" என்ற செய்தியை இந்தியாவிற்கு ஆதித்தனார் மட்டுமே அனுப்பிப் பாராட்டினைப் பெற்றார்! செய்திகளை வித்தியாசமாகச் சேகரிப்பதிலும், எழுதுவதிலும் புதுமைகள் செய்த அய்யாவைப் பத்திரிகைகளும், படிப்பவர்களும் பாராட்டினார்கள் என்பதைவிட 'மகாத்மா' காந்தியடிகளே பாராட்டினார் என்பது சிறப்பல்லவா? ஆதித்தனாரின் கட்டுரைகளும், தமிழ் எழுத்துக்களும் லண்டனில் தமிழ் ஆய்வுகள் செய்த பேராசிரியர் ஜே.ஆர்.பெர்த் என்பவரைக் கவர்ந்த தால். அவர் தயாரித்துக்கொண்டிருந்த 'தமிழ் உச்சரிப்புகள்' என்ற நூலுக்காக ஆதித்தனாரின் தமிழ் உச்சரிப்புகளை ஒலிநாடாவில் பதிவுசெய்து பயன்படுத்தினார் என்று அறியும்போது, எத்தனையோ தமிழர்களும், தமிழறிஞர்களும் இருந்தும்கூட ஆதித்தனாரே தமிழில் சிறந்து விளங்கினார் என்று தெரிகிறதல்லவா? இந்தத் தமிழுணர்வு அவருக்குள் பிறப்பிலேயே நீக்கமற நிறைந்திருந்ததால்தான் பிற்காலத்தில் தமிழ், தமிழர். தமிழ் தேசம் என்ற தீவிரமான தமிழ் லட்சியம் ஆதித்தனாரைத் தமிழகத்தின் தன்மானமிக்கத் தமிழர் தந்தையாய் மாற்றியிருக்கிறது என்று அறியத்தோன்றுகிறது.

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று 1933-ல் சென்னை திரும்பிய ஆத்தித்தனார் சிங்கப்பூரில் சென்று வக்கீல் தொழில் செய்தால் மதிப்பும், மரியாதையும், நல்ல சம்பாத்தியமும் கிடைக்கும் என்பதால் அங்கு செல்ல முடிவெடுத்தார். அதற்குள் நாடார் மகாஜன சங்கம் நடத்திய மாநாட்டின் வரவேற்பு செயலாளராகப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் மதுரையில் நடந்த அந்த மாநாட்டினை மிகச்சிறப்பாக நடத்திக்கொடுத்தார். மாநாட்டுச்செய்திகளைத் தொகுத்து, ஒரு புத்தகவடிவில் மாநாட்டில் அவர் விநியோகித்ததே பிற்காலத்தில் 'மகாஜனம்'என்ற பத்திரிகையாகி, இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது என்பதும் அவரின் தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றுதான்!

    சிங்கப்பூர் சென்று சிறப்பாக வழக்கறிஞர் தொழில் செய்துவந்த ஆதித்தனார் 'ஆதித்தன் அண்ட் கம்பெனி' என்ற பெயரில் வக்கீல்கள் குழுவமைத்துப் பெரும் மதிப்புடன் செயல்பட்டார். அங்கும் அவரின் தமிழார்வம் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கத்தூண்டியது! அங்குள்ள ஆதித்தனாரின் நண்பரான கோ.சாரங்கபாணி என்பவருக்கு,'தமிழ் முரசு'என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு ஆதித்தனார் காரணமாயிருந்தார். அந்தப் பத்திரிகை இன்றளவும் மலேசியாவில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

    கடல்கடந்தும் அய்யா ஆதித்தனார் ஆரம்பித்த 'தமிழ் முரசில்' 1987 இல் நான் எழுதிய 'ஒற்றைக் கித்தாமரம்' என்ற தொடர்கதை ஓராண்டுகாலமாகப் பிரசுரமாகி நிறைவடைந்தது என்பதை இந்தநேரத்தில் நினைவுகூர்கின்றேன். சிங்கப்பூரில் வெற்றிக்கொடிநாட்டிய ஆதித்தனார் வீட்டில்தான், தமிழ்நாட் டில் இருந்து சென்ற ஈ.வெ.ரா.பெரியார் தங்கியிருந்து, அவரின் தமிழ் கொள்கைகளைப் பாராட்டி, 'தமிழ் சீர்திருத்த இயக்கம்' என்ற அமைப்பை ஆதித்தனாருடன் சேர்ந்து ஆரம்பித்துவைத்தார் என்பது ஆதித்தனாரின் தமிழ் பற்றுக்கு எடுத்துக் காட்டல்லவா? சிங்கப்பூரைவிட்டு இரண்டாம் உலகப்போர் நடந்த 1942-ம் ஆண்டில் தமிழகம் திரும்பிய ஆதித்தனார் அதற்குப்பிறகு இந்திய வைஸ்ராயை விட அதிகமாகப்பொருளீட்டித்தந்த பாரிஸ்டர் தொழிலுக்குப் போகவே இல்லை! காந்தியடிகள் எப்படி 1919-ல் இந்தியா திரும்பியபின் தன் பாரிஸ்டர் தொழிலை மூட்டைகட்டிவைத்துவிட்டு, முழுநேர அரசியலில் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அவ்வாறே ஆதித்தனாரும் பாரிஸ்டரைத் துறந்து, தமிழைக் கையில் எடுத்துக்கொண்டார். தமிழ் தொண்டாற்றவே பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆதித்தனார்.

    மதுரையில் 'மதுரை முரசு' என்ற பத்திரிகையைத் தொடங்கி, கையினாலே காகிதக்கூழ் தயாரித்து, காகிதம் செய்து, காயவைத்து, கையினால் இயந்திரம் ஓட்டி...காலம் தவறாமல் பத்திரிகையை வெளியிட்டுச் சாதனை படைத்தார். இரண்டாவதாக 'தமிழன்' என்ற பத்திரிகையைத்தான் துவங்கினார். அந்தப்பத்திரிகையின் நோக்கம் எது என்பதை அவரே எழுதியுள்ளார்.

    "அந்நியர்களுக்கு நம் நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும் என்பது நமது நோக்கம்"

    துண்டுபட்டுக்கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபடவேண்டும் என்பது நமது நோக்கம்."

    தமிழனுக்கு ஆளும் உரிமை வேண்டும். அரசுவேண்டும். நாடு வேண்டும் என்பது நோக்கம்" என்பது போன்றவற்றைத் தன் தமிழ் சார்ந்த, தமிழன் சார்ந்த கோட்பாடாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் "நாம் தமிழர்" இயக்கம். அன்றைக்கு ஆதித்தனார் ஆரம்பித்த இயக்கம் இன்றும் வீறுநடை போடுகிறது என்பதுதான் அய்யாவின் தொலைநோக்கு வெற்றிப்பார்வையாகும்.

    'தமிழன்'தான் 'தந்தி'என மாறியது. அதுவே 'தினத்தந்தி'என்ற இமாலய வடிவெடுத்து இன்று இந்தியாவிலேயே அதிகப் பிரதிகள் விற்கும் நாளேடாக விளங்குகிறது. தந்தை பெரியார் தினத்தந்தி பற்றியும், ஆதித்தனார் பற்றியும் இவ்வாறு சொல்கிறார்...

    "செயற்கரிய செய்த பெரியார், ஆதித்தனார். யாருமே செய்யாத அறிய செயல்களை அவர் செய்திருக்கிறார். இதை நான்தான் நன்கு உணர்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை கிடையாது. ஒரு சிலர் ஆரம்பித்த பத்திரிகைகளும் தலைதூக்க முடியாமல் ஒழிந்தன. ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது. இது எவ்வளவு பெரிய செயல் என்று எனக்குத்தான் தெரியும். 'நாமும் பத்திரிகை நடத்தலாம்' என்ற துணிவை மற்றவர்களுக்குக் கொடுத்தவர், ஆதித்தனார்தான். ஆகவேதான் ஆதித்தனாரை 'செயற்கரிய செய்த பெரியார்' என்று சொல்லுகிறேன்."

    எத்தனையோ போராட்டங்கள்....எத்தனையோ சிறை வாசங்கள்...அய்யா லட்சிய புருசர் என்பதால் உயரமான அந்த மனிதர் உயர்ந்து கொண்டே வந்தார். மேல்சபை உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினரானார். சட்டப்பேரவைத் தலைவர் ஆனார். ஆதித்தனார் அவைத்தலைவராக ஆன நாள்முதல் தமிழக சட்டசபை மேலும் சிறப்படையத் தொடங்கியது. சட்டசபையில் தமிழ்மணம் கமழ்ந்தது. தமிழன்னை உளங்குளிர்ந்தாள்.சட்டசபை நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தலாம் என்று விதி இருந்தது. ஆனால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அதை மாற்றி தமிழிலேயே நிகழ்ச்சிகளை நடத்தினார், ஆதித்தனார்.

    சட்டசபையின் வரவு செலவு திட்ட (பட்ஜெட்டு) கூட்டம் ஜூன் 17-ம் நாள் தொடங்கியது. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற திருக்குறளின் முதலடிகளைக் கூறி கூட்ட நிகழ்ச்சிகளை தொடங்கிவைத் தார். சட்டசபைக் கூட்டம் திருக்குறள் பாடலுடன் தொடங்கியது இதுவே முதல் முறையாகும். திருக்குறளுடன் தொடங்கிய இந்தக் கூட்டம், "தமிழ்நாடு வாழ்க" என்ற நாட்டு வாழ்த்துடன் முடிந்தது.

    அவர்காலத்தில்தான் சட்டசபை விதிகள் அவரால் தமிழில் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டது! அசல் தமிழர் ஒருவர் "நாம் தமிழர்" என்றதும். "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்று அறைகூவியதும் தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் செயல் என்பதை யாரும் மறக்கவும் மாட்டார்கள். மறுக்கவும் மாட்டார்கள். தமிழகத்தின் தென் எல்லையின் தன்னிகரற்ற தலைவரைப் பற்றிச்சொல்வதானால் பக்கங்கள் நீளும்.

    பத்திரிகையுலகின் முன்னோடியான அய்யா அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களில் "பத்திரிகை எழுத்தாளர் கையேடு" என்ற தன்னிகரற்ற நூல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் தரமான நூலாகும். அரசு போற்றிப்பாதுகாக்க வேண்டிய அறிவுப்பெட்டகம்! பத்திரிகையாளர்கள் கண்டிப்பாகக் கைகளில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய கலைச்சுரங்கம்! ஆதித்தனார் எழுதிய 'தமிழ்ப் பேரரசு' தமிழ் தேசியம் விரும்பும் அனைவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூலாகும். தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் ஆதித்தனாரைப்போல தன்னலமற்று இருப்பார்களேயானால் அவர்களுக்கு என் தலைதாழ்த்தி வணங்குகின்றேன்!

    தொடர்புக்கு: rtspandy@gmail.com

    • இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.
    • எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது.

    சினிமாவையும் தாண்டி எங்களோடு வாழ்பவர் குஷ்பு. எங்கள் வீட்டில் கடைக்குட்டி தங்கை குஷ்பு என்று சொன்னேன் அல்லவா. அப்படித்தான் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டார்.

    என் தங்கை பிருந்தாவும், குஷ்புவும் பிரிக்க முடியாத சகோதரிகள் போன்றவர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவது முதல் கலாய்ப்பது வரை இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

    இருவருக்கும் பிறந்த நாள் வந்தால் போதும் நள்ளிரவு 12 மணிக்கு போன் பண்ணி கடுப்பேத்துவாங்க.

    ஏய், வாடி-போடி என்று இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நெருக்கமாக, உரிமையுடன் பழகி வருகிறார்கள்.

    குஷ்பு எங்கள் வீட்டுக்கு வந்தால் போதும் எங்கள் அம்மாவிடம் போய் முதலில் கேட்பது 'அம்மா இன்று என்ன சமையல் என்று தான் கேட்பார். புளிச்ச கீரை சாதம் என்றால் போதும் ஒரு பிடி பிடிப்பார். எங்க அம்மா சமைத்து கொடுப்பதில் புளிச்சகீரை சாதத்துடன் அரைத்த சாம்பார். இந்த இரண்டும் கிடைத்தால் போதும் நன்றாக ருசித்து சாப்பிடுவார்.

    அது மட்டுமல்ல குஷ்புவே நன்றாக சமையல் செய்யக்கூடியவர். அவர் பிரியாணி மிக நன்றாக சமைப்பார். வீட்டில் பிரியாணி செய்தால் போதும் ஒன்றாக ஷுட்டிங் செல்வதாக இருந்தால் அங்கே பிரியாணி எடுத்து வந்துவிடுவார். இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.

    படப்பிடிப்புகளை பொறுத்தவரை பாடலுக்கு ஏற்ற நடனங்களை காட்சிப்படுத்தியதும் நான் சென்றுவிடுவேன். ஆனால் கலை நிகழ்ச்சிகளில் தான் முழு நேரமும் நாங்கள் ஒன்றாக இருப்போம். பயங்கர ஜாலியாக இருக்கும். துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து ஒரு மாதம் வரை ஷோக்கள் நடத்துவோம். மோகன்லால் உள்பட பல நட்சத்திரங்கள் அதில் பங்கேற்றிருக்கிறார்கள். மலையாளம் சேர்ந்திருப்பதால் காட்சி நடக்கும்போதே திரைக்கு பின்னால் இருந்து சிரித்து விடுவோம்.

    அதிலும் சிரிப்பது மட்டுமல்ல நீண்ட நேரம் அடக்க முடியாமல் சிரித்து விட்டு காட்சிக்கு செல்வதை கூட மறந்தது உண்டு. அப்படி தான் ஒரு நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் இருந்து வாய்விட்டு நானும், குஷ்புவும் சிரித்து கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குஷ்புவின் காட்சி வந்து இருக்கிறது. அதை நாங்கள் மறந்து விட்டோம். திரைக்கு பின்னால் இருந்த குஷ்பு துள்ளி குதித்து மேடையில் போய் நின்று சமாளித்து காட்சியை பிரமாதமாக ஆடி முடித்தாள்.

    இலங்கையில் முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்களை வைத்து ஒரு ஷோ நடத்தினோம். அது பிரமாதமாக இருந்தது. அந்த ஷோவில் குஷ்பு ஆடியது மட்டுமல்ல தொகுப்பாளினி வேலையும் செய்தார். அவர் தொகுப்பாளினியாகிவிட்டால் பிரமாதமாக பண்ணுவார்.

    குஷ்பு ரொம்ப ஜாலியான பெண். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இவ்வளவு நேரம் தான் ஆடவேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவார். குஷ்புவும், பிருந்தாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. நான் நடன காட்சிகளுக்காக கம்போஸ் பண்ணிக்கொண்டு இருப்பேன். எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது. நான் கொஞ்சம் கோபப்பட்டு சத்தம் போட்டால் தான் இருவரும் எழுந்து செல்வார்கள்.

    குஷ்பு எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நாங்கள் சொல்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் என் அம்மா இறந்த தருணத்தில் அந்த தகவலை கேட்டதும் உடனடியாக வீட்டிற்கு ஓடி வந்தார். சொந்த அம்மாவை இழந்த மாதிரி எங்களுடன் அழுது புரண்டார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை தேற்றிக்கொண்டு எங்களை தேற்றத் தொடங்கினார். அருகிலேயே அமர்ந்து கொண்டு அக்கா சாப்பிடுங்க, அக்கா சாப்பிடுங்க என்று சோறு கூட ஊட்டிவிட்டார். அந்த அளவுக்கு அக்கறையோடு எங்களை பார்த்துக்கொண்டவர்.

    குஷ்புவை பற்றி பேசிகிட்டே போகலாம். என்ன துணிச்சல்? என்ன தைரியம்? யாருக்கும் பயப்படமாட்டார். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவார்.

    தமிழே தெரியாமல் தமிழகத்துக்கு வந்த குஷ்புவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதையும் அவரது முயற்சியால் இன்று அடைந்திருக்கும் உயரத்தை பற்றியும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் ஒரு நிகழ்ச்சியில் பெருமையாக கூறினார்.

    அதே போல் 24 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரிராஜா நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை தொடர்ந்து எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் அந்த படத்தில் 'ஒத்தை ரூபாய் தாரேன்' என்ற பாடலுக்கு இரவு, பகலாக 36 மணி நேரம் நடித்து கொடுத்ததையும் அதற்காக தலையில் ஒரு இரும்பு கிளிப்பை மாட்டிக் கொண்டு அந்த வலியையும் தாங்கி கொண்டு நடித்ததை உணர்ச்சி பூர்வமாக அவர் கூறியபோது நானும் உணர்ச்சி வயப்பட்டேன்.

    அவருக்கு இருக்கும் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் சினிமாவை போல் அரசியலில் நிச்சயம் சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    • எவரது மனமும் புண்படும்படி பேச மாட்டார். ஒரு வித்தியாசமான பொண்ணு.
    • ஜோதிகா ஒரு வைர வளையலையும் எனக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    ஜோதிகா...

    திரை உலகில் நான் பார்த்து, அதிசயித்த பொண்ணு! பொதுவாக நடிப்புக்கு வருபவர்களை பார்க்கும் போது அவர்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் நமது மனதுக்குள்ளேயே வரும். அப்படித்தான் காதலுக்கு மரியாதை படத்தின் இந்தி தயாரிப்பில் நடிக்க ஜோதிகா வந்த போது எனக்கு ஏற்பட்டது..

    படப்பிடிப்பு கீழ்ப்பாக்கம் பகுதியில்தான் நடத்தப்பட்டது. நடனம் சொல்லி கொடுப்பதற்காக நாயகி எங்கே என்று பார்க்க சென்றேன். ஜோதிகாவை பார்த்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு திரைத்துறைக்கு வந்திருந்த நேரம் அது. மிகவும் சின்ன பொண்ணு. அவரை பார்த்ததும் என்னால் அதிர்ந்து பேசுவதற்கு கூட மனம் வராது.

    மிகவும் சின்ன பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை பொறுப்போடு செய்வதில் கில்லாடி. பார்ப்பதற்கு குடும்ப பாங்காக இருப்பார். குறிப்பாக அதிகம் பேச மாட்டார். எப்போதும் அமைதியாகவே காணப்படுவார்.

    எப்படித்தான் கலைத்துறையில் வரப்போகிறாரோ என்ற சந்தேகமும் பலரிடம் இருந்தது. நான் பலமுறை அவரிடம் உன்னால் முடியும் என்று சொல்லி ஊக்கப்படுத்தியதும் உண்டு. நடிகர் சங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் ஆடுவதற்கு அழைத்தோம். அதை கேட்டதும் அய்யய்யோ மேடையில் ஆடுவதா எனக்கு பழக்கமே இல்லையே.... நான் வரவில்லை அக்கா என்று என்னிடம் கெஞ்சாத குறையாக கெஞ்சினார்.

    நான் அவருக்கு தைரியம் சொன்னேன். நிச்சயமாக உன்னால் நன்றாக ஆட முடியும். தைரியமாக ஆடு என்று சொன்னேன். ஒரு வழியாக சம்மதிக்க வைத்தோம். மேடையில் அர்ஜூன் ஜோடியாக நடனம் ஆடினார். அதைப்பார்த்ததும் ஜோதிகாவா இப்படி என்று ஆச்சரியப்படும் வகையில் ஆடி அசத்தினார்.

    அதன்பிறகுதான் மேடையில் நடனம் ஆட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கும் ஏற்பட்டது. அதன்பிறகு முதன் முதலாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் காக்க... காக்க... என்ற பாடலுக்கு நடிகர் சூர்யாவுடன் ஆடினார்.

    அதன்பிறகு கலை உலகில் அவருக்கு திருப்புமுனை தந்தது என்றும் சொல்லலாம். அவரை எல்லோரும் திரும்பி பார்க்க வைத்த படம் என்றும் சொல்லலாம். எல்லோருக்கும் தெரிந்தது சந்திரமுகி. சந்திரமுகி இப்படித்தான் இருப்பாளோ என்று ஜோதிகாவின் நடிப்பை பார்த்து நினைத்துக்கொண்டார்கள். அவர் ஆடியதை ரசிகர்கள் நிச்சயம் என்றும் மறக்க மாட்டார்கள்.

    "ரா ரா ....ரா ரா.............

    சரசுக்கு ரா ரா .....

    ரா ரா ....

    ல..க..ல..க..ல..க..லகலகலக .........

    தாம் தரிகிட தீம் தரிகிட தொம் தரிகிட

    நம் தரிகிட ....... என்ற பாடல் தியேட்டரில் நிசப்தத்தை உருவாக்கி ரசிகர்களின் கண்களை அகல விரிய வைத்துவிட்டது.

    நாக்கை சுழற்றி பாடியபடியே கண்களையும் உருட்டிக்கொண்டு ஆடும் அந்த ஒரு பாடல்தான் அந்த படத்துக்கே இதயம் போன்றது. அதனால்தான் அந்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

    ரஜினி சார் அடிக்கடி அந்த பாடல் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அந்த பாடலுக்கு ஜோதிகா ஆடுவதற்காக நான் கம்போஸ் பண்ணி வைத்திருந்ததை பார்த்ததும் ஜோதிகாவும் என்னிடம் கேட்டார். "அக்கா... எனக்கு இதெல்லாம் ஆட வருமா" என்றார். ஏனென்றால் நாட்டியம் அவருக்கு தெரியாது என்பதும் ஒரு காரணம்.

    அப்போது நான்தான் சொன்னேன். "பயப்படாதே நான் செய்து காட்டுவதை போல் நீ உடல் பாவனைகளை வைத்தால் போதும். நிச்சயமாக உன்னால் நன்றாக ஆட முடியும்" என்றேன்.

    ஐதராபாத்தில் அந்த பாடல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினி சார் என்னிடம் கேட்டார். கலா ஜோதிகா சின்னப்பொண்ணாக இருக்கிறாரே, மூவ்மெண்ட் எல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும். அவரால் நன்றாக ஆட முடியுமா என்று கேட்டார். அவரிடமும் அதே வார்த்தையை தான் சொன்னேன். நன்றாக ஆடுவார் சார் கவலைப் படாதீங்க என்றேன்.

    அந்த பாடலுக்கான ஒவ்வொரு ஷாட்டையும் ஒரு மணி நேர இடைவெளி விட்டு எடுத்தோம். படப்பிடிப்பு நடந்த போது ஜோதிகாவோடு வினித் ஆடுவார். வினித் முறைப்படி நடனம் கற்றவர். மிக அற்புதமாக ஆடுவார். அவர் ஆடுவதை பார்த்ததும் ஜோதிகா பயந்து போய் அக்கா எனக்கு சரியாக வருமா என்று கேட்பார். அப்போது நான் சொல்வேன் நீ ஏன் வினித்தை பார்க்கிறாய். நான் சொல்வது போல் கைகளையும், கால்களையும், முகத்தையும் வைத்துக்கொள். கேமிரா முன் நிற்கும் என்னை மட்டும் பார் என்பேன்.

    பின்னர் படப்பிடிப்பு முடியும் வரை அதேபோல் என்னை பார்த்து நான் ஆடுவதை போல் அவரும் ஆடி நடித்து முடித்தார். 2 நாட்களில் முழு பாடலையும் படமாக்கினோம்.

    அந்த பாடலில் தரையில் முட்டி போட்டு சுழன்று ஆட வேண்டும். அவ்வாறு முட்டிப்போட்டு ஆடியதில் ஜோதிகாவின் 2 மூட்டுகளும் வீங்கி ரத்தக்கட்டு ஏற்பட்டு இருந்தது. ரத்தக்கட்டு இருந்ததால் ஏற்பட்ட வலியையும் தாங்கி, அதனால் முக பாவனையில் எந்த மாற்றமும் தெரிந்து விடாதபடி அவர் நடித்துக்கொடுத்ததை நினைத்து எனக்கே மெய் சிலிர்த்து போனது.

    தனக்கு எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும், அதை தாங்கிக் கொண்டு ஒரு காட்சியை மீண்டும், மீண்டும் படமாக்கும் நிலையை ஏற்படுத்தமாட்டார்.

    செட்டில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அமைதியாக, ஒரு ஓரமாக உட்கார்ந்திருப்பார். அதே நேரம் ஜாலியாக பேசும்போது ஜாலியாக பேசுவார். எவரது மனமும் புண்படும்படி பேச மாட்டார். ஒரு வித்தியாசமான பொண்ணு.

    படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த ரா...ரா.. சரசுக்கு ரா...ரா... பாடல் காட்சியை போட்டு பார்ப்பதற்காக அழைத்தார்கள். சிவாஜி புரொ டெக்ஷன் அலுவ லகத்திற்கு சென்றி ருந்தேன். அங்கு நான் ரஜினி சார், ஜோதிகா, வினித் உள்பட எல்லோருமே இருந்தோம். ஏற்கனவே அவர்கள் ஒரு முறை போட்டு பார்த்திருக்கி றார்கள். ஆனால் என்னிடம் எந்த விசயத்தையும் சொல்லவில்லை. பாடல் காட்சியை திரையில் ஓட விட்டு பார்த்துக்கொண்டிருந்தோம். நன்றாக அமைந்திருந்தது.

    எல்லோரும் பாராட்டினார்கள். அதன் பிறகுதான் எனக்கும் சந்தோஷம். நன்றாக ஆடுபவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பேர் வாங்குவதை விட ஆடத் தெரியாதவர்களை ஆட வைத்து பேர் வாங்குவதில் தனி சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷம் ஜோதிகா மூலம் எனக்கு அதிகமாகவே கிடைத்தது.

    அவருக்கு மிகப்பெரும் புகழை தேடி கொடுத்த அந்த பாடலை, அதில் நடித்ததை அடிக்கடி மகிழ்ச்சியுடன் பேசுவார். எல்லாம் உங்களால்தான் அக்கா... என்று என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்ன ஜோதிகா ஒரு வைர வளையலையும் எனக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அது என்னால் மறக்க முடியாதது.

    அவருக்கு நானும் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உடனடியாக கொடுக்க முடியவில்லை. பின்னர் விலை உயர்ந்த ஒரு புடவையை அவருக்கு வாங்கி பரிசளித்தேன்.

    • சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள்.
    • கோவில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பு அறன் என்னும் கொள்கையில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.

    மேற்கு பார்த்து அமைந்த சிவன் கோவில் இது, இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள்பாலிக்கிறார்கள். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.

    இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

    ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக்கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.

    கோவிலின் சிறப்பு:

    இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல்படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.

    சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோவிலில் உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.

    மாசி 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.

    இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்ப கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.

    கோவில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பு அறன் என்னும் கொள்கையில் இந்த கோவில் அமைந்துள்ளது. எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன் பொருள் மக்களை பாதுகாக்கும் வீதம் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது வாசல் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோக குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோக குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும்போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது. சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானாலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது.

    கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது. இந்த கோவிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

    உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணியதான துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.

    வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க்காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக்கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.

    கோவில் தெப்பகுளம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மூளையில் நாம் கல் எரிந்தால் அதன் எட்டு பக்கமும் மோதி மீண்டும் பழைய இடத்தை வந்தடையும்.

    ஜோதிட ரத்னா அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்

    ஜோதிட ரத்னா அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்

     பெண்ணிற்கு பெரியது மானமா…. தர்மமா… என்பதை விளக்கும் வகையில் இங்கு உள்ள சிற்பம் ஒன்றை அமைத்துள்ளனர். சிவபெருமான் வயதானவர் போன்று மாறு வேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம் "பிச்சை" கேட்கிறார். அப்போது அந்தப்பெண், அன்னத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகி விடுகிறது. தானத்தைவிட "மானமே" பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி, பெண்ணின் வலது கையிலிருக்கும் சாதத்தை எச்சம் செய்து விடுகிறது. அந்த பெண் இறைவனுக்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி மிகுந்த முக மலர்ச்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகி விட்டதால், அந்த பெண் கோபத்தில் முகம் வாடியுள்ள காட்சியும் இரண்டு சிலைகளில் மிக அழகாக வடித்துள்ளனர்.

    மற்றொரு குறிப்பிடத்தக்க சிற்பம் 18 ஆயுதமேந்திய சிவன் நடனம். சிவபெருமான் விழுந்த தனது காதணியை தரையில் இருந்து காலால் எடுத்து மீண்டும் காதுகளுக்கு வைக்கும் காட்சி அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இங்கு அமைக்கப்பட்ட சிலைகள் ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சரியம் அளிக்கிறது. அது என்னவென்றால் இரதியை மன்மதன் பார்க்கும் காட்சி, இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மேல் இருக்கும் மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.

    மேலும் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இது ராமன் வாலியை வதம் செய்த நிகழ்வை காட்டுகிறது. இப்படி மிகுந்த அருமையான சிற்பங்கள் பலவற்றை இங்கு காணலாம்.

    இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை.

    இந்த கோவில், சிறப்பு விநாயகர் சிலையை கொண்டுள்ளது, அதில் நீங்கள் தண்ணீரை ஊற்றினால் அது கீழே ஒரு கிணற்றுக்குச் செல்லும், மேலும் நீர் எந்த வழியாகப் பயணிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியாது, மேலும் நீரின் வீழ்ச்சியைக் கேட்கலாம்.

    பாதாள லிங்கம்

    இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.

    பார்க்க வேண்டிய தூண்களில் உள்ள சிற்பங்கள், ரிஷி பதினி, பார்வதி, பிக்ஷாதனர், மோகினி அவதாரத்தில் மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியக்ரபதர், ஜெயமுனி, ஹயக்ரீவர், ஒர்துவ தண்டவர், சிவன் மற்றும் மனநிலை ஷிவா விஷ்ணு, அகோர வீரபாதிரர், அக்னி வீரபாதிரரர், பிரதோஷ நாயகர், தட்சிணமூர்த்தி, துவாரபலகர், ஸ்ரீ காளி, மாணிக்கவாசகர், பிரம்மா, காஞ்சி காமாட்சி, மன்மதன், ரதி

    சுரகேசுவரர்

    இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி:

    தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப்பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திறந்திருக்கும்.

    ஜோதிட ரத்னா அஸ்ட்ரோ வெ.பழனியப்பன் 9942162388

    ×