search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரச்சினை தரும் பிரம்மஹத்தி தோஷம்
    X

    பிரச்சினை தரும் பிரம்மஹத்தி தோஷம்

    • சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
    • வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும்.

    தோஷங்களில் பிரம்மஹத்தி தோஷம் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும். மிக மிக கொடுமையான பாவங்கள் செய்தவர்களைதான் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கொலை செய்பவர்களை இந்த தோஷம் ஜென்ம ஜென்மமாக விரட்டும் என்று சொல்வார்கள்.

    பிரம்மன் உருவாக்கிய உயிரை துன்புறுத்தி பறிக்கும்போது இந்த தோஷம் தலை முறைகளை கடந்தும் தொடர்ந்து விரட்டும் என்று சொல்வார்கள். பிரம்மனின் தலையை துண்டித்ததால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மகிஷாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் சப்தகன்னியர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவரான வரகுண பாண்டியன் அறியாமல் வீரசேனன் என்ற பிராமணரை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற் பட்டது.

    இவர்கள் எல்லாம் பரிகாரம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார்கள். ராமர் ராமேசுவரத்தில் வழிபாடு செய்து தனது தோஷத்தை போக்கி கொண்டார். வரகுண பாண்டிய மன்னன் திருவிடை மருதூர் ஆலயத்தில் பூஜைகள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டியடித்தார்.

    கொலைப்பழியால் மட்டுமே பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள். தீராத பாவங்கள் என்ன செய்தாலும் இந்த தோஷம் உடனே பிடித்து தொங்கிக்கொண்டு வந்து விடும். பெற்ற தாய்-தந்தைக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்துபவர்கள், பெற்றோரை வீட்டை விட்டு விரட்டுபவர்கள், பசுக்களை துன்புறுத்தி கொல்பவர்கள், உதவி செய்தவர்களுக்கு துரோகம் செய்பவர்கள், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை அலட்சியம் செய்பவர்கள், கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், நன்றி மறந்து துன்பத்தை விளைவிப்பவர்கள் போன்றவர்களுக்கு கண்டிப்பாக பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.

    சிலர் இளம் வயதில் காதல் வயப்பட்டு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்கி றேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றினாலும் இந்த தோஷம் வரும். கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களையும் இந்த தோஷம் தாக்கும். சிலர் கடுமையாக வேலை வாங்கி விட்டு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள் அத்தகையவர்களையும் இந்த தோஷம் பாதிக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும். பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் பாதிக்கப்பட்டதை பெரும்பாலானவர்கள் உணருவது இல்லை. பிரம்மஹத்தி தோஷம் என்பது ஒவ்வொரு வகையிலும் பாதிப்புகளை வாழ்க்கையில் கொடுத்து கொண்டே இருக்கும். மிக கொடிய பாவங்கள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர் களுக்கு வாழ்க்கையில் நிழல் போல பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும்.

    மனைவியால் நிம்மதி இருக்காது அல்லது குழந்தைகளால் பிரச்சினை வரும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். கல்வியில் மேம்பாடு இருக்காது. குலதெய்வத்தால் உரிய உதவிகள் கிடைக்காது. சிலருக்கு திறமைகள் இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. இவை யெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தால் வரும் இடையூறுகள் ஆகும்.

    ஜாதக ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால் ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்த்தாலும் அல்லது குருவின் சாரத்தில் சனியும், சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும் அது பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும்.

    சனியும், குருவும் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்தாலே அதை கண்ணை மூடிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷக்காரர் என்று சொல்லி விடுகிறார்கள். குறிப்பாக ராகு இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9-ம் வீட்டில் சனியும், குருவும் சேர்ந்து இருந்தால் கடுமையான பிரம்மஹத்தி தோஷத்துக்கு உரியவர் என்று ஜோதிட உலகம் சொல்கிறது.

    இதற்காக கவலைப்படவோ, பயப்படவோ வேண்டிய அவசியம் இல்லை. எல்லா வற்றுக்கும் பிரார்த்தனையும், பரிகாரங்களும் இருப்பது போல பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டி அடிக்கவும் பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை எந்த ஆலயத்துக்கு சென்று எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியமானதாகும்.

    பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் இருப்ப தாக சொல்லப்பட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள ஆலயங்க ளுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும். வழிபாடு முடிந்ததும் எவ்வளவு ஏழைகளுக்கு உங்களால் அன்னதானம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஆலய வழிபாடு முடிந்த பிறகு உடைகள் வாங்கி கொடுத்து ஆசி பெறுவது பிரம்மஹத்தி தோஷத்தை விரட்ட உதவும்.

    பொதுவாக பிரம்ம ஹத்தி தோஷம் என்றதும் அனைத்து ஜோதி டர்களுமே திருவிடை மருதூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய் யும்படி சொல்வார்கள். இந்த ஆலயத்துக்கு வழிபாடு செய்ய செல்பவர்கள் தலைவாசல் வழியாக சென்று வழிபாடுகள் செய்துவிட்டு ஆலயத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும். இந்த வழிபாடு மூலம் பிரம்மஹத்தி தோஷம் திருவிடைமருதூர் ஆலயத்தின் தலை வாசலிலேயே தடைபட்டு நின்று விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்தால் இந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள். ராமேசுவரம் கடலில் நீராடி ஆலயத்துக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் குளித்து வழிபாடுகள் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி பலன் கிடைக்கும். அதுபோல ராேமசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி அந்த தலத்து ஈசனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்கிறார்கள்.

    இந்த தலத்தில்தான் ராமர் தனது தோஷத்தை போக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழிக்கு அருகே திருமுல்லைவாசல் என்று அழைக்கப்படும் ஊரில் இருக்கும் முல்லை வனநாதரை வழிபட்டாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதாக சொல்கிறார்கள்.

    காஞ்சீபுரம், திருப்புல்லானி, திருவண்ணா மலை, மதுரை, ஸ்ரீவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர், கோவை மஞ்ச நாயகனூர் அமணீஸ்வரர், சிவ கங்கை திருப்பாசேத்தி திரு நோக்கிய அழகியநாதர், அரியலூர், கீழபழுவூர் ஆலந்துறையார், தஞ்சை கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர், திருவாரூர் கோட்டூர் கொழுந்தீஸ்வரர், வேதாரண்யம் திருமுறை காடர் ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் நீங்கும்.


    இந்த ஆலயங்களுக்கு செல்ல இயலாது என்று நினைத்தால் கவலையே வேண்டாம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மாலை 5 மணிக்கு 9 சுற்றுகள் சுற்றி வந்து வழிபடுவது நல்லது. 9 அமாவாசை நாட்களில் வழிபாடுகள் செய்வது மேலும் நல்லது. இந்திரன், வரகுண பாண்டியன் ஆகியோர் இப்படி சிவபெருமானை வழிபட்டுதான் தங்களது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

    ஆலயங்களுக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வயதானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கலாம். வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு தேவையான உணவு, உடை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது ஆசியை பெற்றாலே பிரம்மஹத்தி தோஷம் தானாக விலகும் என்று புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    எனவே பிரச்சினைகள் தரும் பிரம்மஹத்தி தோஷத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு அது எந்த அளவுக்கு தோஷமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங் கள். அதை 3 வகைகளில் நிவர்த்தி செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பூஜைகள், வழிபாடுகள் செய்தால் பலன்களை பெற முடியும்.

    Next Story
    ×