search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வெள்ள நிவாரண நிதி"

    கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த 25 பவுன் தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர். #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது.

    கேரளாவின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளும் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர். ஏழை, எளிய மக்களும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொச்சியை அடுத்த மஞ்சுமால் பகுதியில் உள்ள இமாக்குலேட் மாதா ஆலய நிர்வாகம், மாதாவுக்கு காணிக்கையாக வந்த தங்க நகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

    இந்த மாதா சிலை 19-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மஞ்சுமாலில் உள்ள ஆலயத்தில் நிறுவினர். ஆலயத்திற்கு வரும் மக்கள் மாதாவுக்கு காணிக்கையாக தங்க நகைகளும், வெள்ளிப் பொருட்களும் வழங்கினர்.

    இதில் மாதாவுக்கு 25 பவுன் எடையில் தங்க நெக்லஸ் செய்யப்பட்டு மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் ஏற்பட்ட சேதங்களுக்காக திரட்டப்படும் நிவாரண நிதிக்கு இந்த தங்க நெக்லசை வழங்க ஆலய நிர்வாகம் முன் வந்தது.

    இதுபற்றி ஆலய பங்கு தந்தை வர்க்கீஸ் தனிச்சக்காட்டு கூறும்போது, மாதா அணிந்த நகையை நன்கொடையாக வழங்க முன் வந்தது மூலம் மற்றவர்களும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக உதவுவார்கள் என்று நம்புகிறோம். மாதா ஆலயம் அமைந்துள்ள மஞ்சுமால் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இங்கு நிவாரண பணிகளுக்காக நாங்கள் இதனை நன்கொடையாக வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே வாரப்புழா ஆர்ச் டயோசீஸ் ஆயரும் அவரது அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களை ரத்து செய்து விட்டு அதற்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் ஆயர் பயன்படுத்தி வந்த காரையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  #KeralaFloodRelief
    முன்ஜாமின் கேட்டு மனு செய்த மூன்று பேரின் டெபாசிட் தொகையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என ஜார்கண்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KeralaCMReliefFund #JharkhandHC
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய மூன்று நபர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கோரி ஜார்கண்ட ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். உரிய கட்டணத்துடன் அந்த மனுக்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ஏ.பி.சிங் வித்தியாசமான முறையில் நேற்று உத்தரவிட்டார்.

    முன்ஜாமின் பெறுவதற்கான முன்வைப்பு (டெபாசிட்) தொகையான 7 ஆயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி முன்ஜாமின் உத்தரவுக்கான கோர்ட்டின் நகலை பெற்று செல்லலாம் என தனது உத்தரவில் நீதிபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

    வழக்கமாக முன்ஜாமினுக்கு செலுத்தப்படும் தொகையை ஜாமின் காலம் முடிந்த பின்னர் செலுத்திய நபர்கள் பெற்று செல்லலாம். ஆனால்,  முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்திய பின்னர் அந்த தொகை மாநில அரசுக்கு வந்த நன்கொடை கணக்கில் சேர்ந்துவிடும். எனவே, பணத்தை செலுத்திய நபர் மீண்டும் அந்த தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaCMReliefFund  #JharkhandHC
    கேரள வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். #KeralaFlood #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அப்போது, ‘கேளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது. #KeralaFlood #SupremeCourt
    கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்த உண்டியல் பணம் ரூ.9 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக விழுப்புரம் சிறுமி அனுப்பி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaRain #KeralaFloods
    விழுப்புரம்:

    தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும், பொது சேவை அமைப்புகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.



    அந்த வகையில் விழுப்புரம் கே.கே. சாலை சிவராம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியின் மகள் அனுப்பிரியா(வயது 8) என்கிற சிறுமி, தான் உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை தனது தந்தை உதவியுடன் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளாள்.

    இதுகுறித்து அனுப்பிரியா கூறுகையில், நான் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக தந்தை மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை 5 உண்டியல்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்தேன். இந்த நிலையில் கேரள மாநிலம் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து செய்திகள் மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். அதனால் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில், தான் சேமித்த ரூ.9 ஆயிரத்தை எனது தந்தை மூலம் கேரள முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பி உள்ளேன் என்றாள். #KeralaRain #KeralaFloods
    ×