search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல் ஜோடி தற்கொலை"

    • முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர்.
    • தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையத்தில் ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம்பெண் விஷம் குடித்தும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் ஊர், பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த முத்துவேல் (வயது 30) மற்றும் அதே ஊரை சேர்ந்த ராசாத்தி (28) என்பது தெரியவந்தது. ராசாத்தி ஏற்கனவே திருமணம் ஆனவர். குழந்தை இல்லை.

    இந்தநிலையில் முத்துவேலுடன் ராசாத்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் 2பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

    தொடர்ந்து உறவினர்கள் கண்டிக்கவே, முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

    மேலும் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டதால் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாயனூர் ரெயில் நிலையம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
    • தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது.

    கரூர்:

    மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையம் வந்தது. பின்னர் அங்கே பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொண்டு மீண்டும் கரூர் நோக்கி புறப்பட்டது.

    இந்த ரெயில் இரவு 9.30 மணி அளவில் மாயனூர் ரெயில் நிலையம் பகுதிக்கு வந்தது. அப்போது ரெயில்வே பிளாட்பாரம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் பார்த்து விட்டனர்.

    அவர்களின் அருகில் சென்று ரெயில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது, நகர்ந்து விடுங்கள் என்று தண்டவாளத்தில் நின்றவர்கள் பார்த்து பதட்டத்துடன் கூச்சல் எழுப்பினர். ஆனால் அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல் தண்டவாளத்தில் இருந்து நகராமல் நின்றனர்.

    அதேபோல் ரெயில் என்ஜின் டிரைவரும் விளக்கு வெளிச்சத்தில் தண்டவாளத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவர்களை ரெயில் நெருங்கி விட்டதால் என்ஜின் டிரைவரால் எதுவும் செய்ய இயலவில்லை. நிற்காமல் சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்து லோகோ டிரைவர் கரூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவனுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் சிதறுண்டு கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் தற்கொலை செய்தவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (40) என்பது தெரியவந்தது. இதில் பெருமாள் கடந்த இரண்டு வருடங்களாக மனைவியை பிரிந்து மாயனூர் பகுதியில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்துள்ளார்.

    அதேபோன்று ஜோதியும் திருமணம் ஆகி கணவரை பிரிந்து பெருமாளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அணைக்கட்டில் பெருமாள் பிடிக்கும் மீன்களை கழுவி வாடிக்கையாளர்களுக்கு வெட்டி கொடுக்கும் வேலையை ஜோதி செய்து வந்துள்ளார்.

    தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. மாயனூர் ரெயில் நிலையம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
    • கள்ளக்காதல் ஜோடி தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கார் மற்றும் வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்தும் பலர் பிரார்த்தனை செய்து செல்வார்கள்.

    எனவே தேவாலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல தேவாலயத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் கார்களும் அங்கு அதிகமாக நின்றன.

    இதில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தவழியே சென்றவர்கள், கார் அங்கேயே நிற்பதை பார்த்துள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காருக்குள் பார்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. வேறு யாரும் இருக்கிறார்களா? என காரை சுற்றி வந்து பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் காருக்கு வெளியே பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, அதில் அவரது டிரைவிங் லைசென்சு இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் ஆரோக்கிய சூசைநாதன் (வயது 35) என்பதும் கடியபட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது. எனவே பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி (30) என்பது உறுதியானது. 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் சகாய சாமினியின் மகன்கள் என தெரியவந்தது.

    கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆரோக்கிய சூசைநாதன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். மேலும் அவரே கார் டிரைவராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் தான், ஆரோக்கிய சூசைநாதனுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சகாய சாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மீன் பிடி தொழிலாளியான ராஜேஷ் கடலுக்குச் சென்றதும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் சகாய சாமினி தனது 2 மகன்களுடன் மாயமாகி விட்டார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சகாய சாமினி மற்றும் அவரது மகன்களை தேடி வந்தனர்.

    இந்த சூழலில் தான் கள்ளக்காதல் ஜோடியினர், ஆரல்வாய்மொழி பகுதியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.

    • மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி, மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பது தெரிந்தது.
    • கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் இன்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக தொங்கிய 2 பேரின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த அடையாள அட்டையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (வயது 23), மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பது தெரிந்தது.

    கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அருள்ஜோதியும், முத்து லட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    தூக்குப்போட்டு தற்கொலை செய்த அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் உறவினர்கள் ஆவர். அருள்ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு திருமணம் ஆகி கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். அருள்ஜோதி சென்னையில் தங்கி சினிமா துறையில் வேலை பார்த்து வந்து உள்ளார். உறவினர்களான இருவருக்கும் முறைதவறிய கள்ளக்காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் இந்த பகுதிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×