search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voice Test"

    மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நிர்மலாதேவிக்கு 5 சுற்றுகளாக குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. #NirmalaDevi #VoiceTest
    சென்னை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதே கல்லூரியில் படித்த சக மாணவிகளையே நிர்மலாதேவி பாலியல் தொழிலில் ஈடுபட சம்மதிக்க அழைப்பு விடுத்தார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கினால் உங்களுக்கு செமஸ்டர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று செல்போனில் பேசி நிர்மலாதேவி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2½ மாதங்களுக்கும் மேலாக அவர் சிறையிலேயே உள்ளார்.

    இந்த வழக்கை பொறுத்தவரையில் மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிர்மலா தேவியை சென்னைக்கு அழைத்துச் சென்று குரல் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதனை தொடர்ந்து நேற்று காலையில் மதுரை சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலையில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் வெளியில் அழைத்து வரப்பட்டார்.

    அவரது வாகனத்திற்கு முன்னால் 2 வாகனங்களும், பின்னால் 2 வாகனங்களும் அணிவகுத்தன. துப்பாக்கி ஏந்திய போலீசார் நிர்மலா தேவியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்துக்குள் காலை 10.25 மணி அளவில் நிர்மலாதேவியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 5 சுற்றுகளாக குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    நிர்மலாதேவியை பேச வைத்து அந்த குரலை பதிவு செய்தனர். அவரிடம் கேள்விகளை கேட்டு அதற்கு அவர் அளித்த பதில்களையும் தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர்.

    இந்த குரல் மாதிரி பதிவுகளை தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இது முடிவடைந்ததும் இன்னும் சில தினங்களில் நிர்மலாதேவியின் செல்போன் உரையாடல் அடங்கிய குரலுடன் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள குரல் மாதிரி ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது.

    இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் நிர்மலா தேவியை சிக்க வைத்ததே அவரது ஆடியோ பேச்சுக்கள்தான் என்பதால் இன்று நடத்தப்பட்ட குரல் பரிசோதனை நிர்மலாதேவி வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. #NirmalaDevi #VoiceTest
    பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார். #NirmalaDevei
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ‘செல்போன்’ உரையாடல் அவருடைய குரல் தானா? என்று பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நிர்மலாதேவிக்கு சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்காக ஐகோர்ட்டு மதுரை கிளையில் போலீசார் அனுமதி பெற்றனர். இதற்காக நிர்மலாதேவியை ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்துச்செல்வதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை தனி வேன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை சென்னை அழைத்துவந்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார். அங்கு அவருடைய குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. அப்போது அவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபோது, என்ன பேசினாரோ? அதை அப்படியே சிலமுறை பேசச்சொல்லி, தடய அறிவியல் நிபுணர்கள் ஆடியோவில் பதிவு செய்வார்கள்.

    அதன்பின்னர் நிர்மலாதேவி ஏற்கனவே பேசி வெளியான செல்போன் உரையாடலுடன், தற்போது பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒப்பிட்டுப்பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்த சோதனை முடிந்தவுடன் நிர்மலாதேவியை மீண்டும் தனி வேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.  #NirmalaDevei
    குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
    மதுரை:

    குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது.

    இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை முடிவில், நிர்மலாதேவியை குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்வதற்கு வருகிற 27-ந்தேதி (நாளை) முதல் 29-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 
    மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நடத்த, விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீது விசாரணை நடத்த, நிர்மலாதேவியை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் நிர்மலாதேவி மீண்டும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, நிர்மலாதேவிக்கு இம்மாதம் 21-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    அத்துடன் அவரது குரல் மாதிரி பரிசோதனையை, மதுரை மத்திய சிறையில் வைத்து நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார், நிர்மலாதேவியை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×