என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லக்கோட்டை முருகன் கோவில்"

    • தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
    • ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை

    வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.

    • முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும்.
    • பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற தலம்.

    காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருத்தலம்.


    ஆலய சிறப்புகள்

    பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங் கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார்.

    ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்கு சென்றார்.

    அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் "பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான் உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்" என்றார், நாரதர்.'

    இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனை தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரதமுனிவர்.


    அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங்கினார். "துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்" என்று ஆசி கூறி அனுப்பினார்.

    பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி நின்றான். துர்வாச முனிவர். பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார்.

    அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான் பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே வல்லக்கோட்டை முருகப் பெருமான் திருக்கோவில்.

    வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபய கரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது.

    பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள் வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள் செய்யப்படுகின்றன.


    வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருண கிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார். ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ்புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறும்.

    ×