என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக தோஷம் நீங்கும்"

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகும்.
    • ஆலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார்.

    ஆய் மன்னர்கள், வேனாடு மன்னர்கள் ஆட்சி செய்த பூமி, யானை தந்தம், மிளகு, இஞ்சி ஏற்றுமதிக்கான வணிகத்தளமாக விளங்கிய ஊர், கருவறை சுற்றி உயிரோட்டமான நாகங்கள் கொண்ட கோவில், நாகதோஷங்கள் நீக்கும் இறைவன், சபரிமலை வாகனங்கள் இளைப்பாறும் இடம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பழம்பெரும் ஆலயம் என பல பெருமைகள் கொண்ட தலம் நிலக்கல் ஆகும். இங்கு மகாதேவர் ஆலயம் என்ற பெயரில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.

    சுவாமி ஐயப்பன் வழிபட்ட தலமாக இது விளங்குவதால், இப்பகுதி `இடத்தாவளம்' என்று அழைக்கப்படுகின்றது. நிலக்கல், தொன்மையான வரலாற்று பின்னணி கொண்ட தலமாகும். யானை தந்தம், லவங்கம், மிளகு, இஞ்சி போன்ற பொருட்கள், நிலக்கல் வரும் வணிகர்கள் மூலமாக கொடுங்ளூர், புறக்காடு போன்ற துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கடையேழு மன்னர்களில் ஒருவரான ஆய் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னாளில் வேனாடு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி இது என வரலாறு கூறுகின்றது. இன்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாக இது விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார். இவரின் எதிரில் நந்தி தேவரும், கன்னிமூலக் கணபதியும் அமைந்துள்ளனர். இக்கோவிலின் இடதுபுறம் பள்ளியறக்காவு தேவி சன்னிதி அமைந்துள்ளது. கருங்கல் கருவறையில் இரண்டு அடுக்குகளாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மகாதேவர் கருவறை முழுவதுமே கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் வாசலிலும், மாடியிலும் உள்ள வாசல்களிலும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறையின் எட்டு திசைகளிலும் நாகங்கள் கலை நயத்தோடு புடைப்புச் சிற்பங்களாக உயிரோட்டத்தோடு அமைந்துள்ளன.

    நாக தோஷம் நீக்கும் தலமாக கூறப்பட்டாலும், வனப்பகுதியில் உள்ள மக்கள் நாகத்தை வணங்கி வழிபட்டதை உணர்த்துவதாக இது உள்ளது. கருவறை கூரை கூம்பு வடிவில் செந்நிற தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    கேரள மாநில அரசின், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இக்கோவிலை நிர்வாகித்து வருகின்றது. இந்தக் கோவிலில் காலையில் உஷா பூஜை, நண்பகலில் உச்ச பூஜை, மாலையில் அத்தாழ பூஜை என, மூன்று கால பூஜைகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன.

    ஆண்டுதோறும் இங்கு மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். பள்ளியறக்காவு தேவி கோவில், இக்கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. சபரிகிரி நீர் மின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அமைவிடம்

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமே நிலக்கல்லாகும். நிலக்கல்லில் இருந்து பம்பா 17 கி.மீ. தூரத்திலும், சபரிமலை 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

    அய்யப்ப தரிசனத்திற்கு முன் நிலக்கல் மகாதேவரை வணங்கிச் செல்வது இன்றும் மரபாக உள்ளது. நாக பயம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக, நிலக்கல் மகாதேவர் விளங்குகின்றார்.

    • கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
    • மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது நாகர்கோவில் நாக ராஜா கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.

    இங்கு வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் 'நாகர்கோவில்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோவில் இதுவேயாகும்.

    திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

    ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமே ஆகும். ஆதி காலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது.


    வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.

    அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது.

    எனவே அந்த பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.

    முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் மார்த்தாண்ட வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.


    இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலை கூரையை பிரித்துவிட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள்.

    கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.

    இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர். இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.

    கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும்.

    இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.


    நாகராஜர் சன்னதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும்.

    அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.

    இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வ நாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும்.

    ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை 'மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னதி, பாலமுருகன் சன்னதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னதி முதலியவை உள்ளன.

    மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. இந்த கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது.

    தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடை பெறும்.

    பெருமாள் கோவில்களில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னதியின் கொடிமரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.


    இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை 'தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமையன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    'ஓடவள்ளி' என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.

    வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான்.

    அரசன் தொடங்கிய இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.

    இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    நடைதிறப்பு நேரம்-பூஜைகள் விவரம்:

    காலை 4 மணி: நடை திறப்பு

    காலை 4.30 மணி: அபிஷேகம்

    காலை 5 மணி: உஷபூஜை

    காலை 10 மணி: அபிஷேகம்

    பகல் 11.30 மணி: உச்சபூஜை

    பகல் 12 மணி: நடை அடைப்பு

    மாலை 5 மணி: நடை திறப்பு

    மாலை 6.30 மணி: சாயரட்சை

    இரவு 7.45 மணி: அர்த்தஜாம பூஜை

    இரவு 8 மணி: நடை அடைப்பு

    ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அன்று பகலிலும், இரவிலும் நடை அடைக்கும் நேரம் மாறுபடும்.

    ×