என் மலர்
நீங்கள் தேடியது "ராகு-கேது தோஷம்"
- 21 நாகங்களின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.
கொஞ்சு தமிழ் பேசும் கொங்குநாட்டின் குறிப்பிடத் தகுந்த தலம், நன்செய் புளியம்பட்டி. இங்கு நடு நாயகமாகத் திகழ்கின்றது, கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில். 110 ஆண்டுகள் தொன்மையானது. 1902-ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் மூலவர், 600 ஆண்டுகள் பழமையானவர்.
இவ்வூரின் வயல் நடுவே ஒரு கருட கம்பம் மட்டும் தனித்து நின்றிருந்த இடத்தில்தான், பெருமாளின் திருக்கோயில் இருந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்து பவானி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஊரும் கோயிலும் அடித்துச் செல்லப்பட்டன. கருட கம்பமும் சுயம்பு மூலவரும் மட்டும் நிலைத்து நின்றன. இந்த வயல்வெளி பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்பட்டது.
கோயில் கட்டுவது சம்பந்தமாக ஊர்மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் வேகமாக அங்கே வந்தார். ''ஐயா, இந்த உச்சி வெயில் நேரத்தில் ஒரு வெள்ளை நாகம், நான் வரும் வழியில் மண்டலமிட்டு படுத்திருக்கிறது. நான் பயந்து ஓடிவந்து விட்டேன். வந்து பாருங்கள்'' என்று பதற்றத்துடன் சொன்னார்.
எல்லோரும் சென்று பார்த்தார்கள். அவர் சொன்னபடியே இருந்தது. இவர்களைப் பார்த்த நாகம் படமெடுத்துச் சில விநாடிகள் ஆடியது. பிறகு மூன்று முறை நிலத்தில் முத்தமிட்டு விட்டு, மளமளவென்று ஊர்ந்து சென்று மறைந்தது. தம் குலதெய்வமான 'கருத்திருமராய சுவாமி'யே கோயில் கட்ட இந்த இடத்தை நாக உருவில் வந்து காட்டியிருக்கிறார் என்று நம்பினார்கள்.
அதன்படிதான் அங்கே கரிவரதராஜப் பெருமாளின் கருவறையுடன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் 21 நாகங்களின் புடைப்புச் சிற்பங்களும் வெளிச் சுவர்களில் நாக சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலய ராஜகோபுரம் பேரழகு வாய்ந்தது.
இங்கு கருவறை வெளிச் சுவரில், ராமாயணத்தின் சுந்தரகாண்ட காட்சி புடைப்பு சிற்பமாக, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதாதேவிக்கு அனுமன், ராமபிரானின் கணையாழியை கொடுக்கும் காட்சி அது.
ஜாதகத்தில் தசாபுக்தி கோளாறு உள்ள தம் குழந்தையை இந்த பெருமாளுக்கு தத்துக்கொடுத்து, பெருமாளிடம் இருந்து தவிடு வாங்கி, பிறகு தவிட்டை கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பிரார்த்தனையால் குழந்தை பாதிப்பில்லாமல் வளர்கிறது என்கிறார்கள்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை இந்தப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடத்துகிறார்கள். பிறகு அலங்காரம், சிறப்பு பூஜை, நைவேத்யம், சமபந்தி போஜனம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இந்த கரிவரதராஜப் பெருமாளைப் பிரார்த்தித்தால், தாங்கள் எண்ணிய காரியம் நல்ல முறையில் நிறைவேறுகிறது என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம்.
கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் அச்ச உணர்வைப் போக்கி, சுகப் பிரசவம் அடையச் செய்பவர் இவர். இவ்வாலயத்தில் ராமருக்குத் தனி சந்நதி உள்ளது.
அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நவகிரகங்கள், அனுமன், கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். ராகு-கேது, நாகர் சிறப்பு பீடங்கள் இவ்வாலயத்தின் கூடுதல் சிறப்புகள். செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீதேவியையும் நிலங்களுக்கு அதிபதியான பூமிதேவியையும் தன்னருகே கொண்டு, கரிவரதராஜப் பெருமாள் அருளாசி புரிந்து வருகிறார்.
அபய ஹஸ்தத்தால் ஆசீர்வாதத்தையும் கடிஹஸ்தத்தால் நல்ல வைராக்கியத்தையும் நல்கி, சங்கு-சக்கரங்களால் துன்பத்தையும் தீமையையும் விலக்குகிறார். அர்த்த மண்டபத்தின் முன்னால் தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில், காளிங்க நர்த்தன நாகச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.
இவ்வாலயத்தில் காணப்படும் கருட கம்பமும் கருடாழ்வார் சிலையும் மிக உன்னதமானவை. தன்னை வணங்குவோர்க்கு, தன் தலைவராகிய ஸ்ரீமந் நாராயணனிடம் எடுத்துச் சொல்லி வரம் தர வைப்பவர் இவர். இவருக்கு மிளகு சாதம் நைவேத்யமாகப் படைத்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
தான் விரும்பும் மணமகனை அல்லது மணமகளைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்கள் இவ்வாலயம் வந்து இங்குள்ள சீதாதேவிக்கு சந்தனக் காப்பும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, நறுமண தூபங்கள் இட்டு, வேண்டிக் கொண்டால், மனவிருப்பம் நிறைவேறுகிறது. பிரிந்திருக்கும் கணவன்-மனைவி, கருவறை வெளிச் சுவரில் காட்சிதரும் சுந்தர காண்ட சிற்பங்களை வணங்கி, பூஜித்தால் மனமுறிவு நீங்கி ஒன்றாவார்கள்.
இவ்வாலயத்தின் முன்புறம் உள்ள வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்குவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி, மழலைச் செல்வம் கிடைக்கும். கிரக தோஷம் உள்ளவர்கள், நவகிரக சந்நதிக்கு வந்து, தோஷம் ஏற்படுத்திய கிரகத்துக்குரிய உரிய வஸ்திரம், தானியம், மலர் சமர்ப்பித்தால், தோஷம் நிவர்த்தியாகிறது.
முக்கியமாக, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, நாகம் இடம் காட்டிக் கொடுத்த இந்த கோயில் மிகச் சரியான பரிகாரத் தலம் என்றே சொல்லலாம். மூலவரை வணங்கி, தோஷ பரிகாரம் செய்துகொண்டால், கால சர்ப்ப தோஷம் நீங்கி விடும்.
கோயில் தினசரி காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மதியம் 12 மணி வரை கோயில் திறந்திருக்கும். 'கரி' - என்றால் யானை. 'வரதர்'- என்பது முதலையால் துன்பப்பட்ட அந்த யானையை விடுவித்து வைகுண்ட பதவியை அளித்த எம்பெருமான் என்று பொருள்.
வரம் அளிக்கும் தெய்வங்களில் முதன்மையானவர் இந்த கரிவரதர். கோபிச் செட்டிப்பாளையம்-பங்களாப் புதூர் பேருந்துப் பாதையில் உள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்தும் வரலாம். கோபியிலில் இருந்து 18 கி.மீ. தொலைவு.
- கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
- மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது நாகர்கோவில் நாக ராஜா கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.
இங்கு வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் 'நாகர்கோவில்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோவில் இதுவேயாகும்.
திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.
ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமே ஆகும். ஆதி காலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது.

வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.
அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது.
எனவே அந்த பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் மார்த்தாண்ட வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.

இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலை கூரையை பிரித்துவிட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள்.
கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர். இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.
கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும்.
இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

நாகராஜர் சன்னதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும்.
அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வ நாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும்.
ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை 'மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னதி, பாலமுருகன் சன்னதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னதி முதலியவை உள்ளன.
மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. இந்த கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது.
தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடை பெறும்.
பெருமாள் கோவில்களில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னதியின் கொடிமரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை 'தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமையன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
'ஓடவள்ளி' என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.
வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான்.
அரசன் தொடங்கிய இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.
இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
நடைதிறப்பு நேரம்-பூஜைகள் விவரம்:
காலை 4 மணி: நடை திறப்பு
காலை 4.30 மணி: அபிஷேகம்
காலை 5 மணி: உஷபூஜை
காலை 10 மணி: அபிஷேகம்
பகல் 11.30 மணி: உச்சபூஜை
பகல் 12 மணி: நடை அடைப்பு
மாலை 5 மணி: நடை திறப்பு
மாலை 6.30 மணி: சாயரட்சை
இரவு 7.45 மணி: அர்த்தஜாம பூஜை
இரவு 8 மணி: நடை அடைப்பு
ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அன்று பகலிலும், இரவிலும் நடை அடைக்கும் நேரம் மாறுபடும்.
- ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது.
- நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை.
பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தை நாகராஜர் ஆலயம் என்றும், நாகரம்மன் ஆலயம் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த ஆலயத்தின் மூலவர் ஆண் என்று சிலரும், பெண் என்று சிலரும் கூறுவர்.
நாகராஜர் கோவிலின் உட்கோவில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றன. அவற்றுள் தெற்கே அமைந்துள்ள பாம்பின் படத்தின் அடியில் சுற்றி வளையம் போல அமைந்த அதன் உடற்பகுதியின் மேல் ஆழ்ந்த சிந்தையில் அமர்ந்துள்ள ஓர் உருவம் உள்ளது.

வடக்கே காணப்படும் ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது. இது பற்றி விலங்கியல் பேராசிரியர்கள் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.
நாகப்பாம்பில் ஆண், பெண் இனம் கிடையாது என்பது தவறான கருத்து, நாகப்பாம்பில் ஆண் இனமும் உண்டு. பெண் இனமும் உண்டு. நாகப்பாம்பின் படத்தை வைத்து அதன் இனத்தை அறியலாம்.
ஆண் இனத்தின் படம் அகலம் குறைந்தும், பெண் இனத்தின் படம் அகலம் கூடியும் காணப்படும் என்பது அவர்கள் கருத்து. இந்த அடிப்படையில் நாகராஜர் கோவிலில் படமெடுத்த கோலத்தில் காணப்படும் இரண்டு பாம்பின் சிலைகளில் அகலமான படத்தை கொண்ட பாம்பு பெண் தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

இந்த இரண்டு பாம்புகளை பற்றி வழங்கப்படும் கதையும், இந்த பாம்பு சிலைகளில் வடக்கே காணப்படும் ஐந்து கற்சிலைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும், நாகர்கோவிலில் நாகராஜரும், நாகரம்மனும் கோவில் கொண்டு அருள்புரிகின்றனர் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
படமெடுத்த கோலத்தில் காணப்படும் இந்த இரண்டு பாம்புகளில் தெற்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை தர்னேந்திரர் அதாவது நாகராஜர் என்றும், வடக்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை நாகராணி அதாவது பத்மாவதி என்றும் சமணர்களின் நூலான உத்தரபுராணம் மூலம் நாம் அறிய முடிகிறது.
மேலும் வடக்கே காணப்படும் பாம்பின் படத்தில் கீழே தவக்கோலத்தில் அமர்ந்திருப்பது சமண சமயத்தார் வணங்கும் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று அந்த புராணம் கூறுகின்றது.

நூறும் பாலும் பூஜை
நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை ஆகும். நாகராஜா ஆலயத்தில் தினமும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை எல்லாவகையான அமைதியையும் தரவல்லது. கட்டணம் செலுத்தி இந்த பூஜையை பக்தர்கள் செய்யலாம்.
இந்த பூஜையின் போது மஞ்சள், அரிசி மாவு, பால், கதலிப்பழம், கமுகு ஆகிய ஐந்தும் கலந்து நாகராஜாவுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கதலிப்பழம் நாகராஜாவுக்கு மிகமிக விருப்பமானதாகும். எனவே இந்த நைவேத்திய பூஜை மூலம் நாகரின் அருளை பக்தர்கள் பெறமுடியும்.






